டெல்லியை அதிர வைக்க காத்திருக்கும் 'டிராக்டர் பேரணி' - மாஸ் காட்டும் விவசாயிகள்
டெல்லி: குடியரசு தினத்தன்று டெல்லியில் நடக்கவுள்ள டிராக்டர் பேரணி தங்களின் அரசியலமைப்பு உரிமை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுவரை மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 9 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்துள்ளன. ஆனால் தீர்வு மட்டும் எட்டப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி குடியரசு தின அணிவகுப்பு நடக்கும்போது, விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி டெல்லியில் நடத்தப்படும் என விவசாயிகள் அறிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்கக் கோரி டெல்லி போலீஸார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதில் நேற்று (ஜன.18) நடந்த விசாரணையின் போது, 'குடியரசு தினத்தன்று விவசாயிகள் அறிவித்திருக்கும் டிராக்டர் பேரணி 'சட்டம் ஒழுங்கு' தொடர்பான ஒன்று. எனவே, தேசிய தலைநகருக்குள் யார் யார் நுழைய வேண்டும் என்பதை டெல்லி போலீஸ் தான் முடிவெடுக்க முடியும்' என உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் தெரிவித்தது.
இந்நிலையில், டிராக்டர் பேரணி நடத்துவது தங்களின் அரசியலமைப்பு உரிமை என்று விவசாயிகள் சங்கம் உறுதிபட தெரிவித்துள்ளது.
டெல்லி டிராக்டர் பேரணிக்கு உ.பி. விவசாயிகள் ரெடி..பல ஆயிரக்கணக்கான டிராக்டர்களுடன் பங்கேற்க முடிவு!
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள குல் ஹிந்த் கிசான் கூட்டமைப்பின் பஞ்சாப் பிரிவின் தலைவர் பிரேம் சிங் பாங்கு, "நாங்கள் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். இது ஒரு அமைதியான பேரணி என்பதை அரசு முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 10வது சுற்று பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் குழுவுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிப்போம்.
திக்ரி, சிங்கு, காஸிபூர், ஷாஜகான்பூர் மற்றும் பல்வால் எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே புறவழிச்சாலையில் உள்ள எல்லா இடங்களிலிருந்தும் டிராக்டர் அணிவகுப்பு நடக்கும்.
ராஜஸ்தானிலிருந்து விவசாயிகளும் வர தயாராக இருக்கிறார்கள், அதே நேரத்தில் மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து அணிவகுப்புக்காக டிராக்டர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஆலோசனைக் கூட்டத்தில் இந்த பேரணிக்கான பாதை குறித்து விவாதிக்கப்படும். எங்கள் தொண்டர்கள் போக்குவரத்தை நிர்வகிப்பார்கள், அதேபோல் ஒழுக்கமாகவும் நடந்து கொள்வார்கள்" என்றார்.
பிகேயு தலைவர் ஜோகிந்தர் சிங் உக்ரஹன் கூறுகையில், "டெல்லியில் அமைதியான முறையில் பேரணி நடத்துவதற்கு அரசியலமைப்பு ரீதியாக எங்களுக்கு உரிமை இருக்கிறது.
ஒருவேளை பேரணி நடத்துவதில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருந்தால், டெல்லி போலீஸாருடன் அமர்ந்து பேசி, மாற்று வழியில் பேரணி செல்ல அனுமதி கேட்போம். ஆனால், 26-ம் தேதி டிராக்டர் பேரணி நடந்தே தீரும்" என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
அதேபோல், மற்றொரு பிகேயு தலைவர் பூட்டா சிங் புர்ஜ்கில் கூறுகையில், "நாங்கள் யாருக்கும் எந்த அசௌகரியத்தையும் ஏற்படுத்த இங்கு வரவில்லை. சட்டங்களை ரத்து செய்ய நாங்கள் இங்கு வந்துள்ளோம்.
குடியரசு தினம் என்பது நமது அரசியலமைப்பு உரிமைகளின் கொண்டாட்டமாகும். டிராக்டர் அணிவகுப்பு நடத்துவதை அவர்கள் தடுத்தால், அது எங்கள் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதலாக இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.