டெல்லியில் மோசமான வானிலை... விவசாயிகள் டிராக்டர் பேரணி நாளை ஒத்திவைப்பு!
டெல்லி: டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தனர். அங்கு நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த டிராக்டர் பேரணி நாளை ஒத்தி வைக்கப்படுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
நாளை காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த பேரணி, சிங்கு, திக்ரி, ஷாஜகான்பூர், பல்வால் மற்றும் காசிப்பூர் வழியாக செல்லும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
26-ம் தேதி டெல்லியில் பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டு உள்ளோம். அதற்கு ஒத்திகை பார்க்கும் வகையில் நாளைய டிராக்டர் பேரணி இருக்கும் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.
டெல்லியில் 40 நாட்களாக போராடும் விவசாயிகள்... கடும் குளிர், மழைக்கு 60 பேர் மரணம்
தொடர் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் இன்று 42-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் எந்த பேச்சுவார்த்தையிலும் இதுவரை முடிவு எட்டப்படவில்லை.
ஒத்திவைப்பு
அடுத்தகட்ட பேச்சுவார்த்தை 8-ம் தேதி நடக்கிறது. இந்த நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதுகுறித்து அறிவிப்பையும் ஏற்கனவே வெளியிட்டு இருந்தனர். ஆனால் டெல்லியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த டிராக்டர் பேரணி நாளை ஒத்தி வைக்கப்படுவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
நாளை நடைபெறும்
இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தலைவர்கள் கூறியதாவது :-மோசமான வானிலை காரணமாக டிராக்டர் பேரணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் டிராக்டர் பேரணி நாளை நடைபெறும். காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த பேரணி, சிங்கு, திக்ரி, ஷாஜகான்பூர், பல்வால் மற்றும் காசிப்பூர் வழியாக செல்லும். வருகிற 26-ம் தேதி பிரமாண்ட டிராக்டர் பேரணி நடத்த திட்டமிட்டு உள்ளோம்.
இடையூறு ஏற்படாது
இதற்காக அரியானாவில் உள்ள ஒவ்வொரு விவசாயிகளும் டிராக்டர்களுடன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அதற்கு ஒத்திகை பார்க்கும் வகையில் நாளைய டிராக்டர் பேரணி நடைபெறும். பெண்களுக்கு டிராக்டர் ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கப்படும். குடியரசு தின டிராக்டர் பேரணியில் விவசாயிகள் அமைதியாக இருப்பார்கள். இதனால் குடியரசு தின அணிவகுப்புக்கு எந்த வித இடையூறும் ஏற்படாது என்று விவசாய சங்க தலைவர்கள் தெரிவித்தனர்.