மக்களே உஷார்.. ஆட்டோவுக்கு 32 ஆயிரம்.. பைக்குக்கு 23 ஆயிரம்.. வண்டியை விற்றுதான் அபராதம் செலுத்தனும்
டெல்லி: மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட பின்னர், புதிய மோட்டார் வாகனச் சட்டம் செப்டம்பர் 1ம் தேதி, நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இப்போது போக்குவரத்து விதிகளை மீறியதற்காக, முன்பைவிட, 10 மடங்கு வரை அதிக அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்தை தவிர, இந்தியா முழுவதும் பிற மாநிலங்களில், மோட்டார் வாகன திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் கடும் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள்.
ரூ.32 ஆயிரத்து 500
பஞ்சாப் மாநிலம் குருகிராமில் ஆட்டோ ஒன்றில் இன்று நடத்தப்பட்ட வாகன தணிக்கையின்போது, ஆட்டோ டிரைவரிடம் ஆர்.சி, டி.எல், மாசு சான்றிதழ், காப்பீடு இல்லை என்பது தெரியவந்தது. இதற்கு விதிக்கப்பட்ட அபராத தொகை, 32 ஆயிரத்து 500 ரூபாய். ஒரு ஆட்டோ டிரைவருக்கு இது எவ்வளவு பெரிய அபராதம் என்பதை நினைத்து பார்க்கவே முடியவில்லை.
பைக் விலையே 15 ஆயிரம்தான்
இது முதல் வழக்கு அல்ல. முன்னதாக, நேற்று, குர்கானில், வாகன சோதனையில் சிக்கிய தினேஷ் மதன் என்பவருக்கு புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, போக்குவரத்து போலீசார் அதிரடியாக அபராதங்களை விதித்தனர். அவரிடம் லைசன்ஸ் இல்லை என்பதால், அதற்கு, ரூ.5 ஆயிரம், வாகனப்பதிவு சான்றிதழ் இல்லை என்பதற்காக, ரூ.5 ஆயிரம், டிரைவிங் லைசன்ஸ் இல்லை என்பதற்காக, ரூ.2 ஆயிரம், மாசுவால் காற்று மாசுபாடு ஏற்படுத்தியதற்காக ரூ.10 ஆயிரம், ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக ரூ.1,000 என மொத்தம் 23 ஆயிரம் ரூபாய் அபராத தொகை விதிக்கப்பட்டது. இதில் கொடுமை என்னவென்றால், இப்போதைய சந்தை மதிப்பில் அவர் ஸ்கூட்டியின் மதிப்பே ரூ.15 ஆயிரம் தான்.
அதிகபட்சம்
புதிய விதிமுறைப்படி, சீட் பெல்ட் பயன்படுத்தாததற்கு அபராதம் ரூ .1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு இது 100 ரூபாயாக இருந்தது. ரெட் லைட் ஜம்ப் செய்தால் முன்பு அபராதம் 1000 ரூபாய். இப்போது 5000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். குடிபோதையில் வாகனம் ஓட்டிய முதல் குற்றத்திற்கு 6 மாத சிறைத்தண்டனையும், ரூ .10,000 வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறையாக அவர்கள் தவறு செய்தால், அவர்கள் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ .15,000 வரை அபராதமும் செலுத்த வேண்டும்.
|
லஞ்சம்
ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுவதற்கு ரூ .500 க்கு பதிலாக ரூ .1000 அபராதம் விதிக்கப்படும். மேலும், ஓட்டுநர் உரிமத்தை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கலாம். அதிக அபராத தொகை செலுத்த வேண்டியுள்ளதால், மக்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதற்கு பயப்படுகிறார்கள். இருந்தாலும் தெரியாமல் செய்யும் சிறு தவறுக்கும் இத்தனை மடங்கு அபராதம் என்றால் கஷ்டம்தானே. லஞ்சம் வாங்கும் சில போலீசாரும் இந்த அதிகபட்ச அபராத தொகையை சொல்லி, மிரட்டியே, தங்கள் பாக்கெட்டை நிரப்பும் வாய்ப்பும் உள்ளதை மறுக்க முடியாதுதானே!