புதிய கேபிள் டிவி கட்டணம்... மார்ச் 31வரை அவகாசம் நீட்டிப்பு
டெல்லி: புதிய கேபிள் டிவி கட்டண அறிவிப்பினை வரும் மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரை நீட்டித்து டிராய் அறிவித்துள்ளது.
பார்க்கும் சேனலுக்கு மட்டுமே காசு, பார்க்காத சேனலுக்கு எதுக்கு காசு, என்ற புதிய கொள்கையை கேபிள் டிவி கட்டண விதிப்பில்
இந்திய தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் கடந்த 2017ம் ஆண்டு மார்ச் மாதம் கொண்டு வந்தது.
இதன்படி ஒவ்வொரு சேனலும் எவ்வளவு கட்டணம் என்பதை அறிவிக்க வேண்டும். அந்த சேனல்களை வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
புதிய கட்டணம் கட்டணம்
அதன்படி, கேபிள் மற்றும் டிடிஹெச்சில் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த கடந்த ஆண்டு டிசம்பர் 29ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசத்தை ஜனவரி 31ம் தேதியாக நீட்டித்து டிராய் கடந்த மாதம் அறிவித்தது. இந்த காலஅவகாசம் முடிந்தததால் புதிய கட்டணக் கொள்கை பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
மூன்று ஆப்சனகள்
சேனல்கள் கொடுக்கும் திட்டம், டிடிஹெச் திட்டம், பொதுமக்கள் தேர்ந்தெடுக்கும் ஆப்சன் என 3வகையில் டிடிஹெச் நிறுவனங்கள் ஆன்லைனில் பட்டியலை போட்டுள்ளன. இதனை மக்கள் தேர்ந்தெடுத்து வருகிறார்கள். இந்தியாவில் தற்போது 10 கோடி வீடுகளில் கேபிள் டிவியும், 6.7 கோடி வீடுகளில் டிடிஹெச் சேவையும் உள்ளது.
மக்களிடையே குழப்பம்
இதில் கேபிள் வைத்திருப்போரில் 65 சதவீதம் பேரும், டிடிஹெச் வைத்திருப்போரில் 35 சதவீதம் பேரும் தங்களுக்கு தேவையான சேனல் பட்டியலை தேர்ந்தெடுத்துவிட்டனர். மற்ற மக்கள் இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை. இதனிடையே, புதிய சேனல்களை தேர்வு செய்வதிலும், பழைய சேனல் பேக்குகளை நீக்குவதிலும் பொதுமக்களுக்கு குழப்பம் இருப்பதாக டிராயிடம் முறையிடப்பட்டது.
அவகாசத்தை நீட்டித்த டிராய்
இதனால் டிராய் நிறுவனம், மக்களிடையே கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களுக்கு புதிய கேபிள் கட்டணத்தை தேர்ந்தெக்க வைக்க விரும்பியது. இதையடுத்து கேபிள் டிவி புதிய கட்டண முறைகளை அமல்படுத்துவதற்கான அவகாசத்தை மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து டிராய் அறிவித்துள்ளது. எனவே அடுத்த மாத இறுதிக்குள் தங்களுக்கு பிடித்த சேனல்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.