புதிய அறிவிப்பு வெளியிடப்படும் வரை நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில் சேவைகள் ரத்து நீட்டிப்பு
டெல்லி: புதிய அறிவிப்பு வெளியிடப்படும் வரை நாடு முழுவதும் அனைத்து பயணிகள் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பது நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகை பேரழிவுக்குள்ளாக்கி வருகிறது கொரோனா வைரஸ். கொரோனா பரவலால் நாடு முழுவதும் மார்ச் மாதம் இறுதியில் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.
இந்த ரயில் சேவைகள் ரத்தானது ஆகஸ்ட் 12- வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் இடம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்லவும் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. அதேபோல் இயல்பு வாழ்க்கையை பாதிக்காத வகையில் சரக்கு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே ரயில் சேவைகள் ரத்து தொடர்பான முரண்பட்ட தகவல்கள் கடந்த 2 நாட்களாக பரவி வருகின்றன. இதனால் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டிருந்தது. இதனால் ரயில்வே அமைச்சகம் இன்று தெளிவான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், மறு அறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் அனைத்து வழக்கமான ரயில் சேவைகள், புறநகர் சேவைகள் ரத்து தொடரும் என்றும் 230 சிறப்பு ரயில்கள் மட்டும் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.