'கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை'.. சான்றிதழ் காட்டினால் மட்டுமே இந்தியாவுக்குள் அனுமதி
டெல்லி: இத்தாலி மற்றும் தென் கொரியாவில் இருந்து இந்தியா வரும் பயணிகள் 'கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை' என சான்றிதழ் காட்டினால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனறு அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
மத்திய அரசு கொரோனா வைரஸை தடுக்க வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. கொரோனா வைரஸ் மோசமான பாதிப்பு உள்ள சீனா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியா வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிதாக விசா வழங்குவதை நிறுத்திவைத்துள்ளது.
அத்துடன் உலகின் எந்த நாட்டில் இருந்து இந்தியாவின் எந்த விமான நிலையத்திற்கு வந்தாலும் அவர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய, ஸ்கிரீனிங் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் மார்ச் 10ம் தேதி முதல் சில நிபந்தனைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி இத்தாலி மற்றும் தென் கொரியாவில் இருந்து இந்தியா வரும் பயணிகள், அந்தந்த நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ ஆய்வகங்களில் இருந்து, கோவிட்-19 தொற்றால் எந்த பாதிப்பும் இல்லை என சான்றிதழ் பெற்று வந்தால் மட்டுமே இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளால் பரவலாக கட்டுப்படுத்தப்படும் வரை இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.