விரைவில் எங்கும் வாக்களிக்கும் திட்டம்... அசத்தும் அரோரா
டெல்லி : நாட்டின் எந்த வாக்குச்சாவடியில் இருந்தும் வாக்களிக்கும் முறையை விரைவில் கொண்டு வருவது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
நாட்டின் 11 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, யூட்யூப் தளத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, வாக்காளர் தினம் குறித்தும் பேசிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் அவர் பேசியதாவது: தேசிய வாக்காளர் தினம் என்பது வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமை மற்றும் கடமையை உணர்த்துவதாகும். 2021 ம் ஆண்டின் தேசிய வாக்காளர் தின மைய கருத்தானது, வாக்காளர்களை சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிப்பதை உறுதி செய்வதாகும்.
கொரோனா கால தேர்தல்
இதுவரை நேர்மையாகவும். வெளிப்படை தன்மையுடனும் தேர்தல் நடத்தப்பட்டு வந்துள்ளது. தற்போது கொரோனா கட்டுப்பாடு காலத்தில் மற்றொரு புதிய கோணமாக பாதுகாப்பான தேர்தலை நடத்தவும் வழிகாட்டப்பட்டுள்ளது. வாக்காளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய கடமை தேர்தல் கமிஷனுக்கு ஏற்பட்டுள்ள புதிய சவால்.
விறுவிறு தேர்தல் பணி
4 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே துவங்கி, முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதிகளில் வசிக்கும் வாக்காளர்கள் எவ்வித பயமும் இன்றி, அதிக அளவில் ஓட்டளிக்க வேண்டும்.
எங்கும் ஓட்டளிக்கலாம்
அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக விரைவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக சென்னை ஐஐடி.,யுடன் இணைந்து சில திட்டங்களை தயாரித்து வருகிறோம். விரைவில் நாட்டின் எந்த ஒரு வாக்குச்சாவடியில் இருந்தும் வாக்காளர் வாக்கினை அளிக்கும் ரிமோட் வோட்டிங் (Remote Voting)முறையை கொண்டு வருவது குறித்து தேர்தல் கமிஷன் பரிசீலித்து வருகிறது.
என்ஆர் கோரிக்கை
விரைவில் இதற்கான ஒத்திகைகள் தொடங்க உள்ளன. இதனால் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களும் தேர்தலில் ஓட்டளிக்க வாய்ப்பு ஏற்படும். வெளிநாடு வாழ் இந்தியர்களின் பல கால கோரிக்கையை ஏற்று இந்த முறை கொண்டு வர பரிசீலிக்கப்பட்டு வருகிறது என்றார்.