மோடி அரசுக்கு விவசாயிகள் மீது திடீர் பாசம் ஏன்?.. மாநிலங்களவையில் திருச்சி சிவா கொந்தளிப்பு
டெல்லி: நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது அவர்களை சந்திக்கக் கூட நேரம் ஒதுக்காத மோடி அரசுக்கு திடீரென அவர்கள் மீது பாசம் வந்தது ஏன் என மாநிலங்களவையில் திருச்சி சிவா கொந்தளித்துள்ளார்.
வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன.
இதற்கு பாஜகவின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலி தளம் கடும் கண்டனத்தை தெரிவித்தது. இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கலானது. அப்போது திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசுகையில் நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டம் நடத்திய போது அவர்களை சந்திக்க கூட நேரம் ஒதுக்காத உங்களுக்கு திடீரென அவர்கள் மீது பாசம் வந்தது ஏன்? என கேள்வி எழுப்பி கொந்தளித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சிவா, வேளைண் மசோதாக்கள் மீதான ஓட்டெடுப்பு, முறையாக நடக்கவில்லை. 12 கட்சிகள் சார்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்து மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஷ் தன்னிச்சையாக செயல்பட்டார்.
விவசாய மசோதா.. வாக்கெடுப்பில் குளறுபடி? ராஜ்யசபா துணை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
அதனால் உணர்ச்சிவசப்பட்டு மைக் உடைப்பு உள்ளிட்ட செயல்களில் சிலர் ஈடுபட்டனர். இன்றைய தினம் அவை கண்ணியமாக நடைபெறவில்லை. வேளாண் மசோதாக்களை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தினேன் என்றார் திருச்சி சிவா.