இந்தியில் பேச எதிர்ப்பு தெரிவித்த திருச்சி சிவா.. சில நொடிகள் மௌனமாக இருந்த பிரதமர் மோடி!
டெல்லி: கொரோனா தடுப்பூசி தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியில் பேசியதற்கு திமுக சார்பில் கலந்து கொண்ட திருச்சி சிவா எதிர்ப்பு தெரிவித்தார்.
அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இருக்கும் போது ஹிந்தியில் பேசினால் ஒன்றுமே புரியவில்லை என திருச்சி சிவா பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
அப்போது சில நொடிகள் அமைதியாக இருந்த பிரதமர் மோடி பின்னர் தொடந்து இந்தியில் பேசி தனது உரையை நிறைவு செய்தார்.
அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க வேண்டும்- மோடியிடம் திமுக வலியுறுத்தல்
பிரதமர் மோடி
கொரோனா வைரஸ் தடுப்பூசி அடுத்த சில வாரங்களில் கிடைக்கும் என்கிற நிலையில் இதுபற்றி இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் காணொளி கூட்டத்தில் பிரதமர் மோடி நிறைவுறையாற்றினார்.
சில வாரங்கள்
அப்போது பிரதமர் மோடி இந்தி மொழியில் பேசுகையில், இந்தியாவிலேயே தயாரிக்ப்படும் தடுப்பூசி மருந்துகள் உட்பட 8 வலிமையான தடுப்பூசி திட்டங்கள் வெவ்வேறு கட்டங்களில் இந்தியாவில் பரிசோதிக்கப்படுகிறது. இன்னும் சில வாரங்களில் இவை அறிமுகம் ஆக உள்ளன. இந்தியா தயாரிக்கும் பாதுகாப்பான, ஏற்றுக்கொள்ளத்தக்க தடுப்பூசி மருந்துகளை உலகமே கவனித்து வருகிறது என்றார்.
எதிர்ப்பு
இந்த ஆன்லைன் கூட்டத்தில் திமுக சார்பில் திருச்சி சிவா எம்பி கலந்து கொண்டார். பிரதமர் மோடி இந்தியில் பேசியது சிவாவுக்கு புரியவில்லை. இதையடுத்த பிரதமரின் பேச்சை இடைமறித்த திருச்சி சிவா, அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்தி மொழி தெரியாதவர்களும் உள்ளனர். அதனால் ஆங்கிலத்தில் பேசுங்கள். இல்லையென்றால் உரையின் சாராம்சத்தை ஆங்கிலத்திலாவது வழங்குங்கள்" என்றார். இதனால் அப்போது சலசலப்பு ஏற்பட்டது.
இந்தியில் மோடி
அப்போது பேச்சை நிறுத்தி சில நொடிகள் மெளனமாக இருந்த பிரதமர் மோடி, பிறகு தனது பேச்சை இந்தியிலேயே தொடர்ந்து நிறைவு செய்தார்.
முன்னதாகவும் அகில இந்திய அளவிலான கூட்டங்களில் இந்தி மொழியில் தலைவர்களோ, உயரதிகாரிகளோ பேசும் போது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அண்மையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு. வெங்கடேசன், எம்.பி.க்களுக்கு மத்திய அமைச்சர்கள் அனுப்பும் கடிதம் இந்தி மொழியில் இருப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி தனது எதிர்ப்பை பதிவுசெய்திருந்தார்.