மூச்சுத் திணறுது.. மோடி சூப்பர்.. மம்தா கட்சியில் அடுத்த விக்கெட் - எம்.பி. தினேஷ் திரிவேதி ராஜினாமா
டெல்லி: திரிணாமூல் காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தினேஷ் திரிவேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் தீவிரமாக இயங்கி வருகிறது. அதேசமயம், மம்தாவின் ஆட்சியை எப்படியாவது அகற்றிவிட்டு முதன் முதலாக அங்கு ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்றது பாஜகவும் படுவேகமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
பாஜகவை கடுமையாக விமர்சிக்கும் மம்தா, நான் உயிருடன் இருக்கும் வரை பாஜகவை ஆட்சிக் கட்டிலில் அமரவிட மாட்டேன் என்று சமீபத்தில் தனது பிரச்சாரத்தின் போது சூளுரைத்தார். இப்படி பாஜக vs மம்தா மோதல் உக்கிரத்தில் இருக்க, மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி தினேஷ் திரிவேதி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\
பிரதமரின் போராட்டம்
மத்திய பட்ஜெட் விவாதத்தில் பேச எழுந்த போது, திடீரென அவர் தனது ராஜினாமாவை அறிவித்ததால் மற்ற எம்.பி.க்கள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது, "தனது மனசாட்சியின் குரலுக்கு செவிசாய்த்து" ராஜினாமா செய்வதாக திரிவேதி கூறினார். "ஒவ்வொரு மனிதனும் தன் மனசாட்சியின் குரலுக்கு செவிசாய்க்கும் ஒரு காலம் வருகிறது. நாட்டுக்காக அரசியலில் நுழைகிறோம். இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத் உணர்ச்சிபூர்வமான வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதைக் கண்டோம். அதுதான் அவர்கள் நாட்டை நேசிப்பதை காட்டுகிறது. இன்று COVID க்கு இந்தியா பதிலளிப்பதை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் இந்த போராட்டத்தை வெற்றிகரமாக வழிநடத்தினார்.
என்னால் உட்கார முடியவில்லை
வங்காளம் வன்முறையின் பிடியில் இருக்கும்போது என்னால் இந்த நாடாளுமன்றத்தில் உட்கார்ந்திருக்க முடியவில்லை. எனவே இங்கு அமர்ந்திருப்பதற்கு வருத்தப்படுவதை விட, நான் எனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன். திரும்பிச் சென்று வங்காளத்திற்கு சேவை செய்ய முடிவு செய்துள்ளேன்.
மூச்சுத் திணறுகிறது
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் நடப்பதை இனி என்னால் மன்னிக்க முடியாது. எனக்கு மூச்சுத் திணறுகிறது. ராஜினாமா செய்வது சிறந்தது என்று என் மனசாட்சி கூறுகிறது" என்று தினேஷ் திரிவேதி கூறியுள்ளார்.
பாஜகவில் ஐக்கியம்
முதல்வர் மம்தா பானர்ஜி, கட்சியில் அதிகம் நம்பிக்கை வைத்திருந்த மிகச் சில தலைவர்களில் தினேஷ் திரிவேதியும் ஒருவர். காங்கிரஸ் ஆட்சியில் ரயில்வேத்துறை அமைச்சராக பணியாற்றி இருக்கிறார். இவ்வளவு நம்பிக்கை பெற்ற தலைவரான தினேஷ் திரிவேதி பதவி விலகியிருப்பது மம்தாவுக்கு தனிப்பட்ட விதத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, அவர் பாஜகவில் இணையப் போவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. பிரதமரை அவர் பாராட்டியதும் இந்த தகவலை உறுதிப்படுத்துகின்றன.