ராஜ்யசபாவில் இன்று முத்தலாக் மசோதா தாக்கல்… தோற்கடிக்க காங். வியூகம்.. எம்.பிக்களுக்கு உத்தரவு
டெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் ராஜ்யசபா மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மதியம் 2 மணிக்கு அவையில் முத்தலாக் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.
இஸ்லாமியர்களிடையே நிலவும் உடனடி முத்தலாக மூலம் விவாகரத்து செய்யும் முறையை கிரிமினல் குற்றமாக கருதும் மசோதா, கடந்த 17ம் தேதி, லோக் சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதா, சில எதிர்க் கட்சிகளின் வெளிநடப்புக்கிடையே, கடந்த 27ம் தேதி நிறைவேற்றப்பட்டது.
ராஜ்யசபாவிலும் நிறைவேறினால்தான், அந்த மசோதா சட்ட வடிவம் பெறும். எனவே, முத்தலாக் தடை மசோதாவை, ராஜ்யசபாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்கிறார். ஆனால் காலையில் அவை கூடிய சில நிமிடங்களில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியால் ராஜ்யசபாவில் கூச்சல், குழப்பம் நிலவி அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, அவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, முத்தலாக் மசோதா 2 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது.
ராஜ்யசபாவில், ஆளும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை. 245 உறுப்பினர்களை கொண்ட சபையில், பெரும்பான்மைக்கு 123 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், பாஜக கூட்டணிக்கு 93 உறுப்பினர்கள் தான் இருப்பதாக தெரிகிறது. எனவே, எந்த அணியையும் சேராத கட்சி உறுப்பினர்களின் ஆதரவை எதிர்பார்த்து மத்திய அரசு மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளது.
முத்தலாக் மசோதாவை நாடாளுமன்ற கூட்டு தேர்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன. முத்தலாக் மசோதாவுக்கு அகில இந்திய முஸ்லிம் பெண்கள் தனிநபர் சட்ட வாரியம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.