எதிர்பார்த்தது நடந்தது.. ராஜ்யசபாவில் அமளி.. ஒத்திவைப்பு! முத்தலாக், குடியுரிமை மசோதா தாக்கல் இல்லை
Recommended Video
டெல்லி:ஏற்கனவே எதிர்பார்த்திருந்தவாறு... ராஜ்ய சபாவில் முத்தலாக் தடை சட்ட மசோதா, குடியுரிமை சட்ட மசோதா ஆகியவை நிறைவேற்றப்படாமலேயே கூட்டத்தொடர் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. அதன்பின் பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்தார்.
அப்போது ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக இரு அவைகளிலும் கடும் அமளி நிலவியது. அதனால் மசோதாக்கள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை. பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று ராஜ்ய சபாவில் முத்தலாக் தடை சட்ட மசோதா, குடியுரிமை சட்ட மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்படும் என்று எதிர் பார்க்கப்பட்டது.
அலுவல் பட்டியலில் இடம்
அதற்கான அலுவல் பட்டியலிலும் அந்த மசோதாக்கள் இடம்பெற்றிருந்து. ஆனால் ரபேல் போர் விமான விவகாரத்தில் சிஏஜியின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதனை முன்வைத்து எதிர்க்கட்சிகள் ராஜ்ய சபாவில் கடும் அமளியில் ஈடுபட்டன.
அவை தள்ளி வைப்பு
தொடர்ந்து கூச்சல், குழப்பம் நிலவியதால் அவையை மறு தேதி குறிப்பிடாமல். சபாநாயகர் வெங்கயா நாயுடு ஒத்தி வைத்தார். அதன் காரணமாக இரு மசோதாக்களும் எதிர்பார்த்தது போலவே முடங்கின. இவை தவிர ஆதார் திருத்த மசோதா, நிறுவனச் சட்ட மசோதா போன்ற பல்வேறு முக்கிய மசோதாக்களும் நிலுவையில் உள்ளன.
கூட்டத்தொடரில் முடங்கியது
முன்னதாக, மத்தியில் ஆளும் பாஜக கூட்டணிக்கு ராஜ்யசபாவில் போதிய பெரும்பான்மை இல்லாததால், கடந்த கூட்டத்தொடரில் முத்தலாக் தடை மசோதா நிறைவேற்றப்படாமல் முடங்கியது. இந்த சட்ட மசோதாவில் உள்ள 3 ஆண்டு சிறை தண்டனை போன்ற கடுமையான பிரிவுகளை நீக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
அறிமுகமானபோது அமளி
லோக்சபாவில் நிறைவேறிய குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவுக்கு வட கிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. பிப்ரவரி 6ம் தேதி இந்த மசோதா மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட போதும் சமாஜ் வாதி கட்சியினர் அமளியால் அது ஒத்திவைக்கப்பட்டது.
கடும் எதிர்ப்பு
இதேபோன்று முத்தலாக் தடைச் சட்டம் அவசர சட்டமாக உள்ளதால், அதை நிறைவேற்றிட மத்திய அரசு முனைந்தது. ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த சட்டத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்ததன.
தப்பித்த அரசு
எதிர்க் கட்சிகளின் ஆதரவின்றி இந்த மசோதாக்களை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என்பதாலும் இந்த மசோதாக்களுக்கு இஸ்லாமியர்களிடமும் வட கிழக்கு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்பு நிலவுவதாலும் இந்த மசோதாக்களிடம் இருந்து மத்திய அரசே தப்பியோட முயன்று வந்தது.
அமளியே காரணம்
போதிய ஆதரவு இல்லை என்று கூறி இந்த மசோதாக்களை கூட்டத்தொடரின் கடைசி நாளில் அப்படியே அந்தரத்தில் விட்டுவிட மத்திய அரசு முடிவு செய்து விட்டதை தான் தற்போதைய நடவடிக்கைகள் உணர்த்துகின்றன. எதிர்பார்த்த படியே... இவ்விரு மசோதாக்களும் தாக்கலாகாமலேயே கூட்டத் தொடர் முடிந்து விட்டது. அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தும் விதமாக எதிர்க்கட்சிகளின் அமளியும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது.