ராஜ்யசபாவில் முத்தலாக் சட்டத்திற்கு எதிர்ப்பு.. எதிர்க்கட்சிகள் கூட்டாக தீர்மானம்
டெல்லி: முத்தலாக் மசோதா கடந்த 27ம் தேதி லோக்சபாவில் நிறைவேறியது. இந்த மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை மீறி, இந்த மசோதா லோக்சபாவில் நிறைவேறிய நிலையில், ராஜ்யசபாவில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாததால், இந்த மசோதாவை முடக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இதுகுறித்து இன்று, காங்கிரஸ், தெலுங்கு தேசம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் ஆலோசனை நடத்தினர். அதில், முத்தலாக் மசோதாவை இப்போதைய வடிவத்தில் ஏற்க முடியாது என்று, தீர்மானிக்கப்பட்டது. எனவே திருத்தங்களை செய்ய தேர்வுக்குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று முடிவெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எனவே, இந்த மசோதாவை ராஜ்யசபாவில் மத்திய அரசால் நிறைவேற்ற முடியாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசுக்கு இன்று அக்னி பரிட்சை காத்துக்கொண்டுள்ளது.
அதேநேரம், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தோ, இது எந்த மதத்தவர்களுக்கும் எதிரான சட்டம் கிடையாது என்று மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.