விடாமல் துரத்தும் கொரோனா! குணமடைந்த பிறகும் ஏற்படும் மோசமான நரம்பியல் கோளாறுகள்.. மருத்துவர்கள் ஷாக்
டெல்லி: கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நபர்களுக்கு மூளையில் ரத்தக்கசிவு (brain haemorrhage) உட்படப் பல மோசமான நரம்பியல் கோளாறுகள் ஏற்படுவதாக டெல்லி மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்,
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி கொரோனா 2ஆம் அலை மே மாதம் வரை நீடித்தது. அப்போது தினசரி கொரோனா பாதிப்பு நான்கு லட்சம் வரை சென்றது.
நாட்டிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் அப்போது கொரோனா நோயாளிகளால் நிரம்பின. குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் அதிகப்படியான மக்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பு
தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள போதிலும், கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகள் நோயாளிகள் ஏற்படுவது அதிகமாகியுள்ளது.இந்நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பாக நரம்பியல் கோளாறுகள் ஏற்படுவது அதிகரித்துள்ளதாக டெல்லியில் அமைந்துள்ளமூல்சந்த் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நரம்பியல் கோளாறு
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மூளை ரத்தக்கசிவு (brain haemorrhage) பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. தற்போது நரம்பியல் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் பாதிக்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவலையும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணைடந்தவர்கள் சில வாரங்களில் தலைவலி, மனச்சோர்வு, நினைவாற்றல் இழப்பு, பதட்டம், பக்கவாதம் போன்ற அறிகுறிகளுடன் அதிகளவில் மருத்துவமனைக்கு மருத்துவமனைக்கு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மனநல பாதிப்பு
அதேபோல கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மன ரீதியான பாதிப்பும் அதிகமாக ஏற்படுகிறது. 60 சதவீத பேருக்குத் தலைவலி, பதட்டம், மனச்சோர்வு, தற்கொலை எண்ணங்கள், தனிமை உணர்வு போன்ற மனநல பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இது குறித்து மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆஷா பக்ஷி கூறுகையில், "கொரோனா வைரசால் ஒருவர் தொழில் ரீதியாகவும் சரி தனிப்பட்ட முறையிலும் சரி கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். அதனால்தான் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன" என்று அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ்
கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு ஏற்படும் நரம்பியல் பாதிப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த டாக்டர் ஆஷா பக்ஷி, என்செபலோபதி கோமா, பக்கவாதம் உள்ளிட்ட பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதாகக் குறிப்பிட்டார். அதேபோல அசாம் மாநிலத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களில் 46% பேருக்கு anxiety, 22% பேருக்கு மனச்சோர்வு, 5% பேருக்கு தற்கொலை எண்ணங்களும் ஏற்படுவது தெரியவந்துள்ளதாக ஆஷா பக்ஷி தெரிவித்தார்.
உடனடி ஆய்வு தேவை
தொடர்ந்து பேசிய டாக்டர் ஆஷா பக்ஷி, "கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களில் அதிகப்படியானவர்களுக்கு கொரோனாவுக்கு பாதிப்பாக நரம்பியல் கோளாறுகளும் மன ரீதியான பாதிப்புகளும் ஏற்படுகின்றன. இதற்கு நாம் உரிய முக்கியத்துவம் கொடுத்துக் கூடுதல் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இதற்குச் சரியான தீர்வு கண்டறியப்படவில்லை என்றால் மோசமான நீண்டகால பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்றார்.
Recommended Video
யாருக்கு அதிகம் ஏற்படுகிறது
இது இந்த ஒரு மருத்துவமனையில் மட்டும் ஏற்படுவதில்லை. நாட்டிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகளிலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு நரம்பியல் மற்றும் மனநல பிரச்சினைகள் அதிகமாக ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற பாதிப்புகள் 45 வயதைக் கடந்தவர்களுக்கும் முதியவர்களுக்குமே அதிகம் ஏற்படுகிறது. நல்வாய்ப்பாக இதுவரை இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் மத்தியில் இதுபோன்ற பாதிப்புகள் அதிகம் கண்டறியப்படவில்லை என்று மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.