காஷ்மீர் பதற்றம்- மோடி, இம்ரான்கானுடன் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு
Recommended Video
டெல்லி: ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பதற்றத்தை தணிக்குமாறு இந்திய பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் 3-வது நாட்டின் தலையீட்டை இந்தியா ஒருபோதும் அனுமதித்தது இல்லை. ஜம்மு காஷ்மீர், நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு.
அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடனான சந்திப்புக்குப் பின்னர், ஜம்மு காஷ்மீர் பேச்சுவார்த்தைக்கு தம்மை மத்தியஸ்தராக இருக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதாக டொனால்டு ட்ரம்ப் கூறியது பெரும் சர்ச்சையானது. பின்னர் இந்த கருத்தை ட்ரம்ப் திரும்பப் பெற்றுக் கொண்டார்.
இதனையடுத்து ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க்கும் 370-வது பிரிவு ரத்து, ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிப்பு என மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் பாகிஸ்தான் இதனை ஏற்க மறுத்து சர்வதேச அரங்கில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்புகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐநா பாதுகாப்பு கவுன்சிலிலும் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து 50 ஆண்டுகளுக்குப் பின்னர் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோருடன் நேற்று ட்ரம்ப் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
Prime Minister @narendramodi had a telephone conversation today with @POTUS H.E. Mr. Donald Trump. Their thirty-minute conversation covered bilateral and regional matters and was marked by the warmth and cordiality which characterises the relations between the two leaders.
— PMO India (@PMOIndia) August 19, 2019
அப்போது, இப்பிராந்தியத்தில் பதற்றத்தை இருநாடுகளும் தணிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என ட்ரம்ப் கேட்டுக் கொண்டதாக அமெரிக்கா அதிபர் மாளிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. ட்ரம்ப்புடனான 30 நிமிட தொலைபேசி உரையாடலில் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் அத்துமீறல்கள் குறித்து பிரதமர் மோடி எடுத்து கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், இருதரப்பு உறவுகள் குறித்து பேசப்பட்டது. இந்தியாவுக்கு எதிராக சில தலைவர்கள் வன்முறையை தூண்டி விடுகின்றனர். இது தெற்காசிய பிராந்திய அமைதிக்கு நல்லதல்ல என ட்ரம்ப்பிடம் சுட்டிக்காட்டப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.