பாலம் உடைந்திடும்.. தாஜ்மகாலுக்கு ட்ரம்ப் காரில் போக இப்படி ஒரு சிக்கல்.. கையை பிசையும் யோகி அரசு
Recommended Video
டெல்லி: பிப்ரவரி 24 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு வரும்போது, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் பிரதமர் மோடியுடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
இதையடுத்து நேரடியாக அவர், ஆக்ராவுக்கு புறப்படுவார். ஆக்ராவில், டொனால்ட் டிரம்பும் அவரது மனைவி மெலனியா டிரம்பும் தாஜ்மஹாலை கண்டு ரசிக்க உள்ளனர். ட்ரம்பின் வருகைக்கான ஏற்பாடுகள் தீவிர கதியில் அங்கு நடந்து வருகின்றன.
இதற்கிடையில், டிரம்ப் பாதுகாப்பு குழுவுக்கு உத்தரபிரதேச மாநில நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை தெரிவித்துள்ளது. அதாவது, ட்ரம்ப் பயணிக்கும் அதிநவீன பாதுகாப்பு வசதி கொண்ட 'பீஸ்ட்' கார், தாஜ்மஹால் அருகே செல்ல முடியாது என்பதுதான் அந்த தகவல்.
வரப்போகும் டிரம்ப்.. அமெரிக்காவிடம் ரூ.240 கோடிக்கு ரோமியோ ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு ஒப்புதல்
வேறு வாகனம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது காரான 'தி பீஸ்ட்'டில் தாஜ்மஹால் அருகே செல்ல முடியாது என்று உத்தரபிரதேச நிர்வாகம் அமெரிக்க ரகசிய சேவைக்கு தெரிவித்துள்ளது. காருக்கு பதிலாக, டொனால்ட் டிரம்ப், மெலனியா டிரம்ப் இருவரும், உ.பி. அரசு வழங்கும் இ-வாகனத்தில்தான் அங்கு செல்ல முடியும். இந்த இ-வாகனங்கள் குறித்து அமெரிக்க ரகசிய சேவைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த வாகனத்தின் செயல்பாடு சரிபார்க்கப்பட்டுள்ளது.
ஏன் கார் செல்ல முடியாது?
இதன் பின்னணியில் உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளது. உ.பி. மாநில நிர்வாகம் இதைத்தான் மேற்கோளிட்டுள்ளது. 1998ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட, உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, தாஜ்மகால் அருகே, 500 மீட்டருக்குள் எந்த வாகனமும் செல்ல கூடாது. அதாவது அரை கிலோமீட்டர் தூரம். வாகனத்திலிருந்து வெளியேறும் மாசு நினைவுச்சின்னத்தை சேதப்படுத்தகூடாது என்பதற்காக, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை மேற்கோள் காட்டி, உத்தரபிரதேச நிர்வாகம் அமெரிக்க ரகசிய சேவைக்கு, ட்ரம்ப் வாகனத்திற்கு அனுமதி இல்லை என்பதை தெரிவித்துள்ளது.
பாலம் தாங்காது
விமான நிலையத்திலிருந்து 1 கி.மீ தூரம் வந்ததும், ஒரு ரயில்வே பாலம் வருகிறது. இந்த பாலம் வழியாகத்தான் ட்ரம்ப் கார் பயணித்தாக வேண்டும். ஆனால், இந்த பாலம், கன ரக வாகனங்கள் செல்லும் தகுதியை இழந்துவிட்டது. பாலத்திற்கு பலம் இல்லை என 8 மாதங்கள் முன்பாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. ஆனால், அமெரிக்க அதிபர் காரின் எடை 6.5 டன் அளவுக்கு இருக்கும். அவரது வாகனத்துடன், கான்வாய்க்கு 70 வாகனங்கள் விரைந்து செல்லும். எனவே, இந்த எடையை பாலம் தாங்காது என அதிகாரிகள் அச்சப்படுகிறார்கள். எனவே வேறு ரூட்டில் ட்ரம்ப்பை அழைத்துச் செல்லும் வேலைகள் நடக்கின்றன. அல்லது இங்கிருந்தே இ-வாகனத்தில்தான் தாஜ்மகால் அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும்.
டிரம்பின் பீஸ்ட் சிறப்பு
உலகின் மிக சக்திவாய்ந்த ஆளுமை டொனால்ட் டிரம்பின் அதிகாரப்பூர்வ வாகனம், ஒரு சாதாரண கார் அல்ல. இந்த காரின் பெயர் ஆர்மர்டு லிமோசைன், இது 2018 ல் அமெரிக்க அதிபரின் வாகனத்தில் சேர்க்கப்பட்டது. இது தி பீஸ்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வாகனத்தில் புல்லட், வெடிகுண்டு அல்லது ராக்கெட்டினால் தாக்கினால் கூட எதுவும் ஆகாது. இது தவிர, தீ பரவினாலும், இந்த வாகனத்தில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. இந்த வாகனத்தை தியாகம் செய்துவிட்டுதான், சாதாரண வாகனத்தில் சென்று தாஜ்மகாலை பார்க்க உள்ளார் ட்ரம்ப்
பாதுகாப்பு தீவிரம்
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஏற்கனவே ஆக்ராவுக்குச் சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை சரி பார்த்தார். டொனால்ட் டிரம்பின் வருகைக்கான முன்னேற்பாடுகளை தீவிரமாக முடுக்கி விட்டுள்ளார். டொனால்ட் டிரம்ப் ஆக்ராவுக்கு வரும்போது, அவர் உரிய அரசுமுறை மரியாதைகளுடன் வரவேற்கப்படுவார். ஆயிரக்கணக்கான மக்களை சாலையில் நிறுத்தி, வரவேற்பு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. டிரம் வருகையையொட்டி, தாஜ்மஹாலைச் சுற்றி 5000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.