அயோத்தியில் ராமர் கோவில்.. அமைத்தாச்சு அறக்கட்டளை... நாடாளுமன்றத்தில் மோடி அதிரடி அறிவிப்பு
டெல்லி: ராம ஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இன்று இதை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
"இன்று காலை அமைச்சரவைக் கூட்டத்தில், அயோத்தி அறக்கட்டளை குறித்து நாங்கள் குறிப்பிடத்தக்க முடிவுகளை எடுத்தோம் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, நாங்கள் ஒரு அறக்கட்டளையை அமைத்துள்ளோம். ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்பது அறக்கட்டளையின் பெயராக இருக்கும். இது ஒரு தன்னாட்சி அமைப்பாக இருக்கும், " என்று மோடி கூறினார்.
ராமர் கோவில் யாத்ரீகர்களுக்காக மற்றொரு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளோம். கோவில் பகுதிக்கு அருகிலுள்ள 67 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளைக்கு ஒதுக்குகிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களையும் சமூகத்தையும் சேர்ந்தவர்கள் செழித்து வாழ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், " என்று அவர் மேலும் கூறினார்.
நவம்பர் 9ம் தேதி உச்சநீதிமன்றம் அயோத்தி வழக்கில் வழங்கிய தீர்ப்பின்படி, ராமர் கோவில் அமைக்க, அறங்காவலர் குழு அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான அமைப்பு அமைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளுடன் ஒரு திட்டத்தை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. அறங்காவலர்கள், அறக்கட்டளைக்கு நிலத்தை மாற்றுவது மற்றும் தேவையான, பிற விஷயங்கள் இந்த அறக்கட்டளையால் மேற்கொள்ளப்படும்.
இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ராமர் கோவில் அறக்கட்டளை 15 உறுப்பினர்கள் கொண்டதாக இருக்கும். அதில் தலித் சமூகத்தை சேர்ந்தவரும் இருப்பார். 67 ஏக்கர் நிலப்பரப்பையும், நிர்வகிக்கும் உரிமை, இந்த அறக்கட்டளைக்குத்தான் இருக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வம் இல்லாத மற்றொரு தகவல்படி, சன்னி வக்ஃபு வாரியத்திற்கு, உ.பி. பாஜக அரசு 5 ஏக்கர் நிலத்தை, அயோத்தியின் மற்றொரு இடத்தில் வழங்கிவிட்டதாக தெரிகிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் வழங்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அந்த நிலம் இந்து அமைப்புக்கு சொந்தமானது என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
தாஜ்மஹாலை கூட மோடி விற்றுவிடுவார்... ராகுல்காந்தி ஆவேசம்
புதிய மசூதியைக் கட்டுவதற்காக சன்னி வக்ஃப் வாரியத்திற்கு, அயோத்தியில் 5 ஏக்கர் மாற்று நிலத்தை ஒதுக்குமாறும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.
ராமர் பிறந்தார் என்று இந்துக்கள் நம்பும் இடத்தில் கோயில் கட்ட மூன்று மாதங்களுக்குள் ஒரு அறக்கட்டளை அமைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.