நெருங்கும் 5 மாநில தேர்தல்.... கட்சி பலவீனமாகிக் கொண்டே போகிறது... காங். தலைவர்கள் சர்ச்சை பேச்சு
டெல்லி: ஐந்து மாநிலங்களில் நடைபெறும் தேர்தலைச் சந்திக்கக் காங்கிரஸ் கட்சி தயாராகி வரும் சூழ்நிலையில், கட்சி பலவீனமாகி வருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அடுத்த மாதம் முதல் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது. இந்த 5 மாநில தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், காஷ்மீர் மாநிலத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் கட்சி தலைமையை விமர்சிக்கும் வகையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அனைவரும் சமம்
முதலில் பேசிய குலாம் நபி ஆசாத், "ஜம்மு காஷ்மீர் அல்லது லடாக் என எந்தப் பகுதியாக இருந்தாலும் எல்லா மதங்களையும், மக்களையும், அனைத்து சாதிகளையும் நாங்கள் மதிக்கிறோம். நாங்கள் எல்லோரையும் சமமாகவே பார்க்கிறோம். இதுதான் எங்கள் பலம், இதையே தான் நாங்கள் தொடருவோம்" என்றார். கடந்த சில நாட்களுக்கு முன் தான், கேரளாவையும் வட இந்தியர்களையும் ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
பலவீனமாகிக் கொண்டே வருகிறது
அத் பின்னர் பேசிய கபில் சிபல், "உண்மை என்னவென்றால், காங்கிரஸ் தொடர்ந்து பலவீனம் அடைந்து வருவதை நாங்கள் காண்கிறோம். அதனால்தான் நாங்கள் இங்குக் கூடியிருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இணைந்து காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்த வேண்டும்" என்றார். காங்கிரஸ் கட்சியின் தலைமை மீது அதிருப்தியில் உள்ள 23 தலைவர்கள் இது குறித்து சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியிருந்தனர். அப்படி அதிருப்தியில் உள்ள தலைவர்களே இந்தக் கூட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
குலாம் நபி ஆசாத்திற்கு பாராட்டு
தொடர்ந்து குலாம் நபி ஆசாத்தை பாராட்டிப் பேசிய கபில் சிபல், "ஒரு விமானத்தைப் பறக்கும் நபர் அனுபவம் வாய்ந்தவராக இருப்பார். இயந்திரத்தில் ஏதேனும் பிரச்சனையைக் கண்டால் அதைச் சரி செய்ய அவரும் கூடவே செல்வார். அதுபோல குலாம் நபி அனுபவமும் கொண்டவர் பிரச்சனையைச் சரி செய்யவும் ஆற்றல் உடையவர்.
பயன்படுத்திக் கொள்ளவில்லை
இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் எந்த நிலையில் உள்ளது என மாவட்டம் வாரியாக தெரிந்து வைத்திருப்பவர் குலாம் நபி ஆசாத். நாடாளுமன்றத்திலிருந்து அவர் ஓய்வு பெற்றுவிட்டார் என்பதை நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. இதை நாங்கள் விரும்பவில்லை. அவரது அனுபவத்தைக் காங்கிரஸ் ஏன் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது எனக்குப் புரியவில்லை"என்றும் அவர் பேசினார்.