இரட்டை இலைக்கு லஞ்சம்: தினகரன் மீது குற்றச்சாட்டைப் பதிவு செய்ய டெல்லி கோர்ட் உத்தரவு
Recommended Video
டெல்லி: இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளதாக டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்துள்ளதோடு, அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
அதிமுக பிளவுபட்டிருந்த காலகட்டத்தில் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ். தரப்பும், தினகரன் தலைமையிலான அதிமுகவும் மனு செய்திருந்தன.
இதில், இரட்டை இலைச் சின்னம் பெற தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தினகரன், புரோக்கர் சுகேஷ் சந்திரசேகரன், மல்லிகார்ஜுனா, குமார் உள்ளிட்டோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அனைவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர் தினகரன் ஜாமீனில் விடுதலையானார். இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அஜய் பரத்வாஜ், இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருக்கிறது. சதி திட்டம் தீட்டுதல், மோசடி, அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி, சாட்சியங்களைக் கலைத்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கும் முகாந்திரம் உள்ளது. அவர் மீது குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து வழக்கை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
120 பி குற்றச்சதி, ஐபிசி201 ஆதாரங்களை அளித்தல், ஊழல் தடுப்புச் சட்டம் போன்ற பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யலாம் என்று தெரிவித்த நீதிபதி, டிசம்பர் 4ம் தேதி, குற்றச்சாட்டு பதிவு செய்யும் நாளில், தினகரன் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரன், தினகரனின் நண்பர் மல்லிகார்ஜூனா, குமார் உள்ளிட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கும் முகாந்திரம் உள்ளது என்று கூறிய நீதிபதி, இவர்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டார்.
அதே நேரம், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நந்துசிங், லலித் குமார் உட்பட 5 பேரை விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே இந்த வழக்கை சட்டப்படி சந்தித்து நிரபாரதி என நிரூபிப்பேன் என்று தினகரன் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகரில் இரட்டை இலை சின்னம் யாருக்கும் ஒதுக்கப்படவில்லை. அதற்குப் பதில் தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது நினைவிருக்கலாம்.