அப்பாடா.. இப்பதான் கொஞ்சம் நிம்மதி.. தினகரனின் பெரா வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் தடை
டிடிவி தினகரனுக்கு எதிரான பெரா வழக்கின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது.
டெல்லி: டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கை எழும்பூர் கோர்ட் விசாரிக்க சுப்ரீம்கோர்ட் அதிரடியாக தடை விதித்துள்ளது.
டிடிவி தினகரனின் அரசியல் வாழ்வில் பெரிய தலைவலியாக இருந்து கொண்டிருப்பது இந்த அன்னிய செலாவணி வழக்குதான்.கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கும் மேலாக இந்த கேஸ் எழும்பூர் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கிறது.
இதில் தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு அமலாக்கத்துறை தரப்பு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணையும் நடத்தி முடிக்கப்பட்டது.
மேல்முறையீடு
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை டிடிவி தினகரனுக்கு வழங்கும்படி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதனை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இடைக்கால தடை
இது சம்பந்தமாக விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெற்றது. அப்போது சென்னை எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்று வரும் பெரா வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினகரனுக்கு நோட்டீஸ்
மேலும் தினகரன் தரப்பில் கேட்கப்படும் அனைத்து ஆவணங்களையும் தினகரனுக்கு வழங்க வேண்டுமெனவும் அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களில் பதில் அளிக்கவும் டிடிவி தினகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கொஞ்சம் ஆறுதல்
ஆர்.கே.நகர் வெற்றிக்கு பிறகு எதை தொட்டாலும் சரிவு, எங்கு திரும்பினாலும் தோல்வி என்றே டிடிவி தினகரனுக்கு அமைந்துவிட்டது. 18 எம்எல்ஏக்கள் வழக்கு, குக்கர் சின்னம் உள்ளிட்ட பல கோர்ட் கேஸ்களின் தீர்ப்புகள் சரிவையே தந்து கொண்டிருந்த நிலையில், இப்போது பெரா வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது தினகரனுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் என தெரிகிறது.