4 தொகுதி இடைத்தேர்தல்.. பரிசுப் பெட்டி சின்னம்தான் வேண்டும்.. உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனு
டெல்லி: 4 தொகுதி இடைத்தேர்தலிலும் பரிசுப் பெட்டி சின்னம்தான் வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தினகரன் மனு தாக்கல் செய்தார்.
அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட பின்னர் சுயேச்சையாக நின்று அதிமுக, திமுக கண்களில் விரலை விட்டு ஆட்டாத குறையாக ஆர் கே நகரில் அமோகமாக தினகரன் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் அமமுக என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கபட்டதும் ஆர் கே நகரில் அளிக்கப்பட்ட குக்கர் சின்னத்தையே வழங்குமாறு கோரினார். ஆனால் குக்கர் சின்னம் பொது சின்னப் பட்டியலில் உள்ளதால் அதை கொடுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.
அமமுகவில் இருந்து சசிகலா ஓரம் கட்டப்படுகிறாரா? டிடிவி தினகரன் அதிரடி விளக்கம்!
இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் தினகரன் கட்சிக்கு பரிசுப் பெட்டி சின்னம் வழங்கியது. 38 நாடாளுமன்றத் தொகுதி மற்றும் 18 சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கும் பரிசுப் பெட்டியையே சின்னமாக கோரியதை அடுத்து அதுவும் கிடைத்தது.
பின்னர் நிரந்தர சின்னத்துக்கு கட்சியை பதிவு செய்யுமாறு ஆணையம் கோரியது. அதையும் தினகரன் செய்துவிட்டார். இந்த நிலையில் மே 19-ஆம் தேதி திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இதற்கு அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். இந்த 4 தொகுதி இடைத்தேர்தல்களிலும் பரிசுப் பெட்டியையே சின்னமாக ஒதுக்கக் கோரி டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.