குக்கர் விசிலடிக்குமா…? டிடிவி தினகரன் வழக்கில் நாளை உச்ச நீதி மன்றம் தீர்ப்பு
டெல்லி: குக்கர் சின்னத்தை ஒதுக்க கோரி அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரம் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எனவே, அந்த சின்னத்தை தமது கட்சிக்கு நிரந்தரமாக பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. வழக்கு விசாரணையின் போது, தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து பதில் அளிக்க வேண்டுமென்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு இருந்தது.
மேலும், பதிவு செய்யப்படாத கட்சி என்பதால் அதற்கு எப்படி தேர்தல் சின்னத்தை ஒதுக்க முடியும் என்று கூறி தேதி குறிப்பிடாமல் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்திருந்தது. இந் நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. தீர்ப்பு எப்படி இருக்கும் என்று தெரியாத நிலையில் தமிழக அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.