டெல்லியில் அகமது பட்டேலுடன் சச்சின் பைலட் சந்திப்பு; கட்சியை நினைத்து கவலை- கபில் சிபல் ஆதங்கம்
டெல்லி: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக வீசிய புயல் தற்போது டெல்லியில் மையம் கொண்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேலை கெலாட்டுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பியிருக்கும் துணை முதல்வர் சச்சின் பைலட் சந்தித்து பேசினார்.
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு கட்சியிலிருந்தே நெருக்கடி கிளம்பியுள்ளது. முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதல்வர் சச்சின் பைலட்டும் 23 எம்.எல்.ஏக்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சிந்தியா பாணியில் பைலட்
மத்திய பிரதேசத்து ஜோதிராதித்யா சிந்தியா பாணியில் சச்சின் பைலட்டும் களமிறங்கியிருப்பதால் காங்கிரஸ் அரசுக்கு தலைக்கு மேலே கத்தி தொங்குகிறது. இந்த நிலையில் டெல்லியில் சோனியாவின் ஆலோசகரான காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது பட்டேலை சச்சின் பைலட் சந்தித்து பேசினார்.
அகமது பட்டேல்- சச்சின் பைலட் சந்திப்பு
அகமது பட்டேலுடனான சந்திப்பின் போது தாமும் தமது ஆதரவாளர்களும் ராஜஸ்தான் முதல்வர் கெலாட்டால் ஓரங்கட்டப்படுவது உள்ளிட்ட பிரச்சனைகளை விரிவாக எடுத்துரைத்தார். தற்போதைய நிலையில் சச்சின் பைலட் வசம் 23 ஆதரவு எம்.எல்.ஏக்கள் இருக்கின்றனர். இதனால் சச்சின் பைலட்டை சமாதானப்படுத்துவதில் டெல்லி மேலிடம் முனைப்பாக உள்ளது.
கபில் சிபல் ட்வீட்
இதனிடையே ராஜஸ்தான் ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக 2 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரமும் பெரிய சர்ச்சையாகி இருக்கிறது. இந்த நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் வெளியிட்ட கருத்து புதிய பஞ்சாயத்தை கிளப்பியுள்ளது.
காங். கட்சியை நினைத்து...
அந்த ட்விட்டர் பதிவில், கட்சியை நினைத்து நான் கவலைப்படுகிறேன். குதிரைகள் அனைத்தும் வெளியேறிய பின்னரே நாம் கவலைப்படுகிறோம் என கபில் சிபல் கூறியுளார். ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கோட்டைவிட்டதை சுட்டிக் காட்டியே கபில் சிபல் இதனை பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.