டிவி சீரியல் தலைப்புகள் கட்டாயம் பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும்.. மத்திய அரசு அதிரடி!
டெல்லி: தொலைக்காட்சி நிகழ்ச்சி தலைப்புகளில் பிராந்திய மொழி கட்டாயம் இடம்பெற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. கஸ்தூரி ரங்கன் பரிந்துரைப்படி இந்தி பேசாத மாநிலங்களில் மும்மொழிக்கொள்கையை நடைமுறை படுத்த மத்திய அரசு முயற்சித்தது.
ஆனால் அதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து மும்மொழிக்கொள்கையை கைவிட்டது மத்திய அரசு.
இந்நிலையில் நேற்று மத்திய அரசின் கீழ் செயல்படும் தெற்கு ரயில்வே, அலுவலகத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிதான் பேச வேண்டும், தமிழில் பேசக்கூடாது என அறிக்கை மூலம் உத்தரவு போட்டது.
குளிர்விக்கும் உத்தரவு
இதற்கும் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதைத்தொடர்ந்து அந்த உத்தரவும் திரும்பப்பெறப்பட்டது. இந்நிலையில் பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலங்களை குளிர்விக்கும் வகையில் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிராந்திய மொழிக்கு முக்கியத்துவம்
அதாவது தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் சீரியர்களில் தொடக்கத்தின் போதும் நிகழ்ச்சியின் முடிவின் போதும் பிராந்திய மொழிகளில் தலைப்பு மற்றும் நடிகர்களின் பெயரை போட வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
தாராளமாக சேர்க்கலாம்
இதுதொடர்பாக பேசிய அத்துறையின் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பிராந்திய மொழியோடு ஆங்கில மொழியை சேர்த்துக் கொள்ள விருப்பப்பட்டால் தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம் என்றும், அதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
பிராந்திய மொழிகளை ஊக்குவிக்க
இதே உத்தரவை திரைப்படங்களுக்கும் பிறப்பித்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை
அண்மையில் இந்தி பேசாத மாநிலங்களில் மும்மொழிக்கொள்கை திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சர்ச்சையில் சிக்கியது. இதுதொடர்பாக பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், ரமேஷ் போக்ரியால் நிஷாங், மும்மொழி தொடர்பாக கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கைதான் சமர்ப்பிக்கப்பட்டது.
எந்த மொழியும் திணிக்கப்படாது
ஆனால் அது கொள்கையாவே ஆகிவிட்டது என தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியும் திணிக்கப்படாது என்றும் மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்தார்.
உத்தரவுக்கு வரவேற்பு
இந்நிலையில் பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கும் வகையிலும் பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு வரவேற்பு எழுந்துள்ளது.