சிபிஐ இயக்குனரை தொடர்ந்து சிபிஐ சிறப்பு இயக்குனர் மீதும் நடவடிக்கை.. அதிரடி டிரான்ஸ்பர்!
சிபிஐ இயக்குனரின் நீக்கத்தை தொடர்ந்து தற்போது சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
டெல்லி: சிபிஐ இயக்குனரின் நீக்கத்தை தொடர்ந்து தற்போது சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
சிபிஐ அமைப்பில் நிலவி வந்த பிரச்சனை ஒரு வழியாக பெரிய போருக்கு பின் முடிவிற்கு வந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வெர்மாவிற்கும், சிபிஐ சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானாவிற்கும் இடையே பெரிய மோதல் நிலவி வந்தது.
இதையடுத்து இவர்கள் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கு எதிராக அலோக் வெர்மா வழக்கு தொடுத்து இருந்தார்.
என்ன தீர்ப்பு
இதில் அலோக் வெர்மாவிற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது. ஆனாலும் பிரதமர் மோடி தலைமையிலான விஜிலென்ஸ் அமைப்பின் தேர்வு கமிட்டி கூடி சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வெர்மா நீக்கப்பட்டார். நாகேஸ்வர ராவ் மீண்டும் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
பதவி விலகினார்
இதையடுத்து அலோக் வெர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதோடு அலோக் வெர்மா தனக்கு வழங்கப்பட்ட வேறு பதவியையும் ஏற்க மறுத்தார். இவர் இதுவரை புதிய பதவியில் எதிலும் சேரவில்லை. இந்த மாத இறுதியில் இவரது பதவிக்காலம் முடிகிறது.
நீக்கப்பட்டார்
இந்த நிலையில் சிபிஐ இயக்குனரின் நீக்கத்தை தொடர்ந்து தற்போது சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மற்றும் அவருக்கு நெருக்கமான சில சிபிஐ அதிகாரிகளும் சிபிஐ பிரிவில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்று அதிகாலை இந்த அறிவிப்பு வெளியானது.
என்ன காரணம்
வரும் 24ம் தேதி சிபிஐக்கு புதிய இயக்குனர் தேர்வு செய்யப்பட உள்ளார். அவர் பணி செய்ய வசதியாக சிபிஐயில் இருக்கும் பிரச்சனையை சரி செய்ய இப்படி நீக்கங்கள் தொடர்வதாக கூறப்படுகிறது. ராகேஷ் அஸ்தானா, விமான போக்குவரத்துத் துறையின் பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.