லடாக் பகுதிகளை சீனாவிற்கு கீழ் காட்டிய விவகாரம்.. பாராளுமன்ற குழுவிடம் மன்னிப்பு கேட்டது டிவிட்டர்!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் இருக்கும் சில பகுதிகளையும் லடாக்கில் இருக்கும் பகுதிகளையும் சீனாவின் கீழ் காட்டியதற்கு டிவிட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. இதற்காக மத்திய பாராளுமன்ற கூட்டு குழுவிடம் டிவிட்டர் நிறுவனம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் இருக்கும் சில பகுதிகளை டிவிட்டர் நிறுவனம் சீனாவிற்கு கீழ் காட்டியது பெரிய அளவில் சர்ச்சை ஆனது. டிவிட்டரில் இருக்கும் geo-tagging வசதியில் லடாக், லே உள்ளிட்ட பகுதிகள் சீனாவிற்கு கீழ் காட்டப்பட்டது.
சீனாவின் ராஜ்ஜியத்திற்கு உட்பட்ட பகுதி என்று இதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. டிவிட்டரின் இந்த செயல் பெரிய அளவில் விமர்சனங்களுக்கு உள்ளானது. மத்திய அமைச்சர்கள் பலர் டிவிட்டர் நிறுவனத்திற்கு இதனால் கடுமையாக கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
மோசம்
இந்த நிலையில் டிவிட்டர் நிறுவனத்திடம் இது தொடர்பாக மத்திய பாராளுமன்ற கூட்டு குழு விளக்கம் கேட்டது. இந்திய பகுதிகளை சீனாவிற்கு கீழ் காட்டியது என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று டிவிட்டர் நிறுவனத்திடம் மத்திய பாராளுமன்ற கூட்டு குழு கோரியது. அதேபோல் டிவிட்டர் நிறுவனம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய பாராளுமன்ற கூட்டு குழு உத்தரவிட்டது.
விசாரணை
இது தொடர்பாக நடந்த விசாரணையில் மத்திய பாராளுமன்ற கூட்டு குழு டிவிட்டர் நிறுவனத்திடம் பல மணி நேரம் கடுமையான கேள்விகளை எழுப்பியது. இந்த விசாரணையின் போதே டிவிட்டர் நிறுவனம் மத்திய பாராளுமன்ற கூட்டு குழு உறுப்பினர்களிடம் மன்னிப்பு கேட்டது. ஆனால் டிவிட்டர் நிறுவனம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய பாராளுமன்ற கூட்டு குழு உத்தரவிட்டது .
உத்தரவு
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் பகுதிகளை சீனாவிற்கு கீழ் காட்டியதற்கு டிவிட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. எழுத்து பூர்வமாக மன்னிப்பு கேட்டு டிவிட்டர் நிறுவனம் மத்திய பாராளுமன்ற கூட்டு குழுவிடம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இந்த பிரமாண பாத்திரத்தில் டிவிட்டர் நிறுவனம், இது போன்ற தவறு இனி நடக்காது. தற்போது நடந்துள்ள தவறை திருத்தி வருகிறோம்.
மாற்றுவோம்
இந்த மாத இறுதிக்குள் டிவிட்டரில் geo-tagging முறையில் மாற்றங்களை கொண்டு வருவோம். நவம்பர் இறுதிக்குள் முழுமையாக தவறுகள் சரி செய்யப்படும், தற்போது இந்திய பகுதிகள் அனைத்தும் இந்தியாவிற்குள் காட்டப்படுகிறது என்று டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. டிவிட்டர் நிறுவனம் இந்த விசாரணையின் போது இந்திய அதிகாரிகளிடம் மன்னிப்பிற்காக கெஞ்சியது என்று மத்திய பாராளுமன்ற கூட்டு குழு விசாரணை கமிட்டியில் தலைமை வகித்த பாஜக எம்பி மீனாட்சி லேகி அறிவித்துள்ளார்.
மீனாட்சி லேகி
டிவிட்டர் நிறுவனம் விசாரணையின் போதே மன்னிப்பு கேட்டது. ஆனால் நாங்கள் எழுத்துபூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இதையடுத்து டிவிட்டர் நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டது. அதோடு மன்னிப்பு கேட்டு பிரமாண பாத்திரம் தாக்கல் செய்துள்ளது என்று மீனாட்சி லேகி குறிப்பிட்டுள்ளார்.