லடாக்கை சீனாவில் இருப்பதாக காட்டிவிட்டு படாதபாடு படும் ட்விட்டர்! எம்பிக்கள் குழு வைத்த செக்!
டெல்லி: லடாக் சீனாவில் இருப்பதாக மேப்பில் காட்டியது தொடர்பாக ட்விட்டர் இந்தியா நிறுவனம் வாய்மொழியாக மன்னிப்பு கேட்ட நிலையில், எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு வெளியிட சொன்ன நாடாளுமன்ற நிலைக்குழு, பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
காஷ்மீரின் லடாக் பகுதியில் அமைந்துள்ள லே நகரத்தில், உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் நினைவாக இந்திய ராணுவத்தால் அருங்காட்சியகம் கட்டப்பட்டிருக்கிறது. அதுஹால் ஆஃப் ஃபேம்' என்று அழைக்கப்படுகிறது.
கடந்த அக்டோபர் 18-ம் தேதி, தேசியப் பாதுகாப்பு ஆய்வாளரான நிதின் கோகலே (Nitin Gokhale), லே பகுதியில் அமைந்துள்ள ஹால் ஆஃப் ஃபேம் போர் நினைவகத்திலிருந்து, பிற்பகல் 12 மணி அளவில் ட்விட்டரில் லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டார் அந்த வீடியோவில் காட்டப்படும் Location' பகுதியில் ஜம்மு & காஷ்மீர், பீப்புள் ரிபப்ளிக் ஆஃப் சீனா' என்று காட்டியது ட்விட்டர் ஆப்.
சீனாவில் ஹால் ஆஃப் ஃபேம்?
இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்...ட்விட்டர் நண்பர்களே... நான் 'ஹால் ஆஃப் ஃபேமி'ல் இருந்து லைவ் வீடியோ ஒன்றைப் பதிவிட்டேன். 'ஹால் ஆஃப் ஃபேம்' என்பதை லொகேஷனாகக் கொடுத்தால் ஜம்மு & காஷ்மீர், பீப்புள் ரிபப்ளிக் ஆஃப் சீனா என்று நிதின் கோகலே ட்விட்டரை கண்டித்தார்.
இந்திய சட்டத்தை மீறிவிட்டது
இதை கண்டு கொதித்த இந்தியர்கள் பலர், ட்விட்டர் நிறுவனத்துக்கு எதிராகப் பல ட்வீட்களைப் பதிவிட்டனர். இந்திய ராணுவத்தின் ஹால் ஆஃப் ஃபேம் அருங்காட்சியகம் சீனாவில் அமைந்திருப்பதாக ட்விட்டர் காட்டியிருப்பது இந்தியச் சட்டத்துக்கு எதிரானது என்றும் `அமெரிக்க நிறுவனமான ட்விட்டர் இந்தியாவின் சட்டத்தை மீறிவிட்டதாக கொதித்தெழுந்தனர்.
தொழில்நுட்ப கோளாறு
இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் அளித்த விளக்கத்தில், ``இந்தத் தொழில்நுட்பக் கோளாறு குறித்து ஞாயிற்றுக்கிழமை தான் எங்களுக்குத் தெரியவந்தது. இந்த விஷயத்தில் மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். விரைவில் இது குறித்து விசாரித்து, தவறு சரிசெய்யப்படும்'' என்று கூறினார். பின்னர் இந்தத் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டது.
ட்விட்டர் சிஇஒவுக்கு கடிதம்
இந்த விவகாரத்தை சாதாரணமாக கடந்துவிட வில்லை மத்திய அரசு. ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜாக் டார்ஸிக்கு (Jack Dorsey) எழுதிய கடிதத்தில் கடும் கோபத்தை வெளிப்படுத்தியது. `ஜம்மு & காஷ்மீர், இந்திய அரசியலமைப்பால் நிர்வகிக்கப்படும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் மாற்ற முடியாத பகுதிகள். இப்போது நடந்த விஷயங்கள் ட்விட்டர் நிறுவனத்துக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதோடு, ட்விட்டரின் நடுநிலைமை, நேர்மை பற்றிய கேள்விகளையும் எழுப்புகின்றன'' என்று கூறியது.
நேரில் ஆஜர்
இதன் பின்னர் இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு ட்விட்டர் இந்தியா நிறுவனம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், ட்விட்டர் இந்தியா சார்பாக பொதுக் கொள்கையின் மூத்த மேலாளர் ஷா குப்தா கம்ரான், ஆயுஷி கபூர், சட்ட ஆலோசகர், பல்லவி வாலியா, கொள்கை தகவல் தொடர்பு, மற்றும் பெருநிறுவன பாதுகாப்பு மன்வீந்தர் பாலி ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர் . அவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
எச்சரித்த மீனாட்சி லோகி
நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பாஜக எம்பி மீனாட்சி லோகி கூறுகையில், லடாக்கை சீனாவின் ஒரு பகுதியாகக் காண்பிப்பது ஒரு கிரிமினல் குற்றமாகும், இது ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியதிருக்கும் என்று கடுமையாக பேசினார். இதற்கு பதில் அளித்த ட்விட்டர் அதிகாரிகள் இந்தியாவின் உணர்வை நாங்கள் மதிக்கிறோம் என்று கூறினார்கள். அதற்கு மீனாட்சி லோகி தலைமையிலான எம்பிக்கள் குழு ட்விட்டரின் விளக்கம் போதாது. .இது உணர்வு பூர்வமான கேள்வி மட்டுமல்ல. ட்விட்டரின் செயல் இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரானது என்று தெரிவித்தனர்.
எழுத்துப்பூர்வமாக கேட்க வலியுறுத்தல்
இதையடுத்து ட்விட்டர் நிர்வாகிகள், நாடாளுமன்ற எம்பிக்கள்குழுவிடம் வாய்மொழியாக மன்னிப்பு கேட்டனர். இதை ஏற்க மறுத்த எம்பிக்கள் குழு எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்., இது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.