லடாக் எங்கிருக்கு? சீனாவில் இருக்கு? எம்பிக்கள் குழுவை கொந்தளிக்க வைத்த ட்விட்டர்!
டெல்லி: லடாக் சீனாவில் இருப்பதாக மேப்பில் காட்டியது தொடர்பாக ட்விட்டர் இந்தியா நிறுவனம் அளித்த விளக்கம் போதாது என்று நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.
காஷ்மீரின் லடாக் பகுதியில் அமைந்துள்ள லே நகரத்தில், உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் நினைவாக இந்திய ராணுவத்தால் அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. அதைஹால் ஆஃப் ஃபேம்' என்று அழைக்கிறார்கள்.
கடந்த அக்டோபர் 18-ம் தேதி, தேசியப் பாதுகாப்பு ஆய்வாளரான நிதின் கோகலே (Nitin Gokhale), லே பகுதியில் அமைந்துள்ள ஹால் ஆஃப் ஃபேம் போர் நினைவகத்திலிருந்து, பிற்பகல் 12 மணி அளவில் ட்விட்டரில் லைவ் வீடியோ ஒன்றை ஆரம்பித்தார். அந்த வீடியோவில் காட்டப்படும் Location' பகுதியில் ஜம்மு & காஷ்மீர், பீப்புள் ரிபப்ளிக் ஆஃப் சீனா' என்று காட்டியது ட்விட்டர் ஆப்.
சீனாவில் இருக்கிறதா?
இதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்...ட்விட்டர் நண்பர்களே... நான் 'ஹால் ஆஃப் ஃபேமி'ல் இருந்து லைவ் வீடியோ ஒன்றைப் பதிவிட்டேன். 'ஹால் ஆஃப் ஃபேம்' என்பதை லொகேஷனாகக் கொடுத்தால் ஜம்மு & காஷ்மீர், பீப்புள் ரிபப்ளிக் ஆஃப் சீனா என்று நிதின் கோகலே ட்விட்டரை குற்றம்சாட்டினார்.
இந்திய சட்டத்தை மீறிவிட்டது
இதற்கு நெட்டிசன்கள் பலரும் ட்விட்டர் நிறுவனத்துக்கு எதிராகப் பல ட்வீட்களைப் பதிவிட்டனர். இந்திய ராணுவத்தின் ஹால் ஆஃப் ஃபேம் அருங்காட்சியகம் சீனாவில் அமைந்திருப்பதாக ட்விட்டர் காட்டியிருப்பது இந்தியச் சட்டத்துக்கு எதிரானது', `அமெரிக்க நிறுவனமான ட்விட்டர் இந்தியாவின் சட்டத்தை மீறிவிட்டதாக கொதித்தனர்.
தொழில்நுட்ப கோளாறு
இதையடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், விளக்கம் அளித்தார். இதுபற்றி அவர் கூறும் போது ``இந்தத் தொழில்நுட்பக் கோளாறு குறித்து ஞாயிற்றுக்கிழமை தான் எங்களுக்குத் தெரியவந்தது. இந்த விஷயத்தில் மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். விரைவில் இது குறித்து விசாரித்து, தவறு சரிசெய்யப்படும்'' என்று கூறினார். பின்னர் இந்தத் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டது.
கேள்வி எழுப்பியது
எனினும் இந்திய அரசு இந்த விவகாரத்தில் அப்படியே விடவில்லை. ட்விட்டர் நிறுவனத்தின் சி.இ.ஓ ஜாக் டார்ஸிக்கு (Jack Dorsey) ``ஜம்மு & காஷ்மீர், இந்திய அரசியலமைப்பால் நிர்வகிக்கப்படும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் மாற்ற முடியாத பகுதிகள். இப்போது நடந்த விஷயங்கள் ட்விட்டர் நிறுவனத்துக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதோடு, ட்விட்டரின் நடுநிலைமை, நேர்மை பற்றிய கேள்விகளையும் எழுப்புகின்றன'' என்று கடுமையாக கேள்வி எழுப்பியது.
ட்விட்டருக்கு நோட்டீஸ்
இதனிடையே அக்டோபர் 18 அன்றே மத்திய தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்., ட்விட்டர் புவியியலை மறுசீரமைத்து ஜம்மு & காஷ்மீரை சீன மக்கள் குடியரசின் ஒரு பகுதியாக அறிவிக்க முடிவு செய்துள்ளது. இது இந்திய சட்டங்களை மீறுவதாக இல்லாமல் என்ன? அமெரிக்க பெரிய தொழில்நுட்பம் சட்டத்திற்கு மேலே உள்ளதா? " என்று கடுமையாக கேள்வி எழுப்பினார். இதன் பின்னர் இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு ட்விட்டர் இந்தியா நிறுவனம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
எம்பிக்கள் சரமாரி கேள்வி
இதன் அடிப்படையில், ட்விட்டர் இந்தியா சார்பாக பொதுக் கொள்கையின் மூத்த மேலாளர் ஷா குப்தா கம்ரான், ஆயுஷி கபூர், சட்ட ஆலோசகர், பல்லவி வாலியா, கொள்கை தகவல் தொடர்பு, மற்றும் பெருநிறுவன பாதுகாப்பு மன்வீந்தர் பாலி ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர் . அவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
எச்சரித்த மீனாட்சி லோகி
நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் பாஜக எம்பி மீனாட்சி லோகி கூறுகையில், லடாக்கை சீனாவின் ஒரு பகுதியாகக் காண்பிப்பது ஒரு கிரிமினல் குற்றமாகும், இது ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டியதிருக்கும் என்று கடுமையாக பேசினார். இதற்கு பதில் அளித்த ட்விட்டர் அதிகாரிகள் இந்தியாவின் உணர்வை நாங்கள் மதிக்கிறோம் என்று கூறினார்கள். அதற்கு மீனாட்சி லோகி தலைமையிலான எம்பிக்கள் குழு ட்விட்டரின் விளக்கம் போதாது. .இது உணர்வு பூர்வமான கேள்வி மட்டுமல்ல. ட்விட்டரின் செயல் இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் எதிரானது என்று தெரிவித்தனர்.