குடியரசு தின டிராக்டர் பேரணியில் வன்முறை... 500க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகள் முடக்கம்
டெல்லி: குடியரசு தின டிராக்டர் பேரணியில் மிகப் பெரியளவில் வன்முறை ஏற்பட்ட நிலையில் சுமார் 500க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளை அந்நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.
விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே பல்வேறு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன
மேலும், விவசாய சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று குடியரசு தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணியையும் நடத்தினர். அப்போது அதில் திடீரென்று வன்முறை ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த வன்முறை தொடர்பாக சுமார் 550க்கும் மேற்பட்ட ட்விட்டர் கணக்குகளை முடக்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வன்முறையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட ட்விட்டர் கணக்குகளுக்கு எதிராக தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவன செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். டிராக்டர் பேரணியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் ஒரு விவசாயி உயிரிழந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "இந்த கணக்குகள் அனைத்தும் எங்கள் விதிகளை மீறியுள்ளன. இவர்கள் பதிவிட்ட போலி செய்திகளை உள்ளடக்கிய ட்வீட்கள் வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்தன" என்று தெரிவித்தார். மேலும், முடக்கப்பட்டுள்ள கணக்குகளில் இருக்கும் சர்ச்சைக்குரிய ட்வீட்களில், அவை போலி தகவல்களைக் கொண்டுள்ளன என்ற குறுஞ்செய்தியும் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
டிரம்ப் பதவி நீக்க தீர்மானம்... டிரம்பிற்கு ஆதரவாக களமிறங்கும் குடியரசு கட்சி எம்பிகள்
இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக இதுவரை 200க்கும் மேற்பட்டவர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் மீது 22 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்