டெல்லி கண்ட 2 பெண் முதல்வர்களும் அடுத்தடுத்து மரணமடைந்த சோகம்.. இருவரையுமே மாரடைப்பு பிரித்தது
Recommended Video
டெல்லி: தலைநகர் டெல்லி கண்ட இரு பெண் முதல்வர்களும், சில நாட்கள் இடைவெளிக்குள் மரணமடைந்துள்ளது மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவர்கள் வேறு யாரும் கிடையாது.. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஷீலா தீட்சித் மற்றும் பாஜகவை சேர்ந்த சுஷ்மா சுவராஜ் ஆகிய இருவரும் தான்.
ஷீலா தீட்சித் கடந்த ஜூலை 20-ஆம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். சுஷ்மா சுவராஜ் ஆகஸ்ட் 6 ஆம் தேதி, நேற்று இரவு மாரடைப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்தார். இவர்கள் இருவருமே நாடு கண்ட மிக முக்கியமான பெண் தலைவர்கள்.
மேலும், ஒரு சிறப்பு என்னவென்றால், இந்த இருவரும்தான் டெல்லி மாநிலம் கண்ட பெண் முதல்வர்கள். மற்ற அனைவரும் ஆண் முதல்வர்கள்தான்.
1998 ஆம் ஆண்டு அக்டோபர் 13 ஆம் தேதி முதல் அதே ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி வரை டெல்லி மாநில முதல்வராக குறுகிய காலம் பதவி வகித்தவர் தான் சுஷ்மா சுவராஜ். இதன் பிறகு டெல்லி முதல்வராக பொறுப்புக்கு வந்தவர் ஷீலா தீட்சித்.
2014ம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றதும், வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார் சுஷ்மா ஸ்வராஜ். இந்திராகாந்திக்குப் பிறகு இந்த பொறுப்பை வகித்த இரண்டாவது பெண்மணி என்ற பெருமையை பெற்றார்.
இவ்வாண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதமே சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்திருந்தார். இதற்கு காரணம் அவரது உடல் பிரச்சனைகள் தான் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் சுஷ்மா சுவராஜ் மரணம் டெல்லி மக்களை, மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.