டெல்லி எல்லையில் போராட்டக் களத்தில் மாரடைப்பால் இரு விவசாயிகள் மரணம்
டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் போராட்டக் களத்தில் இருந்த பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த இரு விவசாயிகள் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தனர்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லிக்குள் செல்ல விவசாயிகளுக்கு அனுமதி இல்லாததால் அவர்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்படுகிறார்கள்.
இதையடுத்து எல்லையிலேயே தங்கள் போராட்டத்தை தொடர்கிறார்கள். அவ்வாறு டிக்ரி- பஹதுர்கார் எல்லையில் போராட்டம் நடந்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் கைதால் மாவட்டத்தைச் சேர்ந்த இரு விவசாயிகள் மாரடைப்பால் மரணமடைந்தார்கள். ஏற்கெனவே கடுங்குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவிலிருந்து மேற்கு வங்கத்திற்கு 100 ஆவது விவசாயிகள் ரயிலை நாளை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த ரயிலில் காலிபிளவர், குடைமிளகாய், முட்டைகோஸ், முருங்கைக்காய், மிளகாய், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள், திராட்சை, ஆரஞ்ச், மாதுளை, வாழைப்பழம், சீதாப்பழம் உள்ளிட்ட பழங்கள் கொண்டு செல்லப்படும்.
ஆண்டின் கடைசி மன்கி பாத் வானொலி நிகழ்ச்சி-இன்று மோடி உரை- ஒலி எழுப்பி புறக்கணிக்க விவசாயிகள் அழைப்பு
இந்த ரயில் அனைத்து நிறுத்தங்களிலும் நிற்கும். விவசாயிகள் கொண்டு செல்லும் பழங்கள், காய்கறிகளுக்கு ரயில் கட்டணத்தில் 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என பிரதமர் அலுவலகச் செய்திக்குறிப்புகள் அறிவித்துள்ளன.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி போராடும் விவசாயிகளுடன் பேசினார். அப்போது அவரது கட்சி நிச்சயம் விவசாயிகளுக்கு துணையாக இருக்கும் என வாக்குறுதியளித்தார்.