அவை காவலர்கள் அத்துமீறல்.. காங் எம்பி ஜோதிமணி உள்பட 2 பெண் எம்பிக்கள் சபாநாயகரிடம் புகார்
டெல்லி: மகாராஷ்டிராவில் முறைகேடாக அரசு அமைத்த பாஜகவை கண்டித்து அமளியில் ஈடுபட்ட போது காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி மற்றும் ரம்யா ஹரிதாஸ் ஆகியோர் தங்களிடம் அவை காவலர்கள் அத்துமீறி நடந்ததாக சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தனர்.
மகாராஷ்டிராவில் ரகசியமாக முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னவீஸும் துணை முதல்வராக அஜித் பவாரும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். இதற்கு சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
மேலும் பாஜக பதவிப்பிரமாணத்தை ரத்து செய்யக் கோரியும் பெரும்பான்மையை உடனடியாக நிரூபிக்க கோரியும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் மகாராஷ்டிரா பாஜகவை கண்டித்து காங்கிரஸ் எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும் மகாராஷ்டிரா சம்பவத்தை கண்டித்து பதாகைகளை ஏந்தியபடி அவையின் மையப்பகுதிக்கு காங்கிரஸ் எம்பிக்கள் சென்றனர்.
பாஜக மீதான பிரேமலதாவின் கோபம்... திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன?
அப்போது அவர்களை அவையிலிருந்து வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை வெளியேற்ற முயன்ற போது எம்பிக்களுக்கும் காவலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது எம்பிக்கள் ஜோதிமணி மற்றும் ரம்யா ஹரிதாஸ் ஆகியோரை வெளியேற்ற முயன்ற போது அவைக் காவலர்கள் இரு பெண் எம்பிக்களிடமும் அத்துமீறியதாக சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளனர்.