இந்தியாவுக்கு 7 மெட்ரிக் டன் மருத்துவப் பொருட்கள்... நேசக்கரம் நீட்டும் ஐக்கிய அரபு அமீரகம்
டெல்லி: கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் நேசக்கரம் நீட்டும் வகையில் இந்தியாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் 7 மெட்ரிக் டன் மருத்துவ பொருட்களை அனுப்புகிறது.
இது இந்தியா முழுவதும் சுமார் 7,000 மருத்துவப் பணியாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பொருட்கள் அனுப்புதல் குறித்த தகவலை இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் அகமது அப்துல் ரஹ்மான் அல் பன்னா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து வரும் நாடுகளுக்கு, நெருக்கடி நிலையை சமாளிக்கும் வகையில் உதவிகள் வழங்கிட ஐக்கிய அரபு அமீரகம் உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே பல ஆண்டுகளாக உள்ள நட்பு மற்றும் சகோதரத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்த மருத்துவப் பொருட்கள் தரப்படுவதாக அகமது அப்துல் ரஹ்மான் அல் பன்னா கூறினார்.
மக்கள் துயர் நீக்கும் பணியில்... மலேசிய இந்துதர்ம மாமன்றம்... தழைத்தோங்கும் மனிதநேயம்
உலகளவில் கொரோனா வைரஸை எதிர்கொண்டு அதில் எப்படி வெற்றிபெறுவது என்பது தான் பிரதான கவலையாக உள்ளதாகவும், இதனால் இந்த சூழலில் கொரோனாவை அழிக்க போராடும் நாடுகளுக்கு அதன் முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய அரபு அமீரகம் உதவிக்கரம் நீட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதுவரை உலகளவில் 34 நாடுகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் 348 மெட்ரிக் டன் மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது உலகம் தழுவிய அளவில் 3,48,000 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.