சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக.. உச்சநீதிமன்றத்தில் உடுமலை சங்கர் குடும்பம் மேல்முறையீடு
டெல்லி: கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் உடுமலை சங்கர் குடும்பத்தினர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சின்னசாமி விடுதலை செய்யப்பட்டது மற்றும் 5 பேருக்கான மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டதற்கு எதிராக முறையீடு செய்யப்பட்டுள்ளளது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா, வேறு ஒரு ஜாதியைச் சேர்ந்த சங்கர் என்பவரை கடந்த 2015ம் ஆண்டு திருணம் செய்தார். இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
உடுமலையில் கொலை
இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பஸ் நிலையத்தின் அருகே பட்டப் பகலில் மூன்று பேர் சேர்ந்து சரமாரியாக வெட்டினர். சங்கர், கவுசல்யா இருவரும் படுகாயமடைந்தனர். சிகிச்சை பலனின்றி சங்கர் உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார்.
உடுமலை சங்கர் கொலை வழக்கு
இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு 2017ம் ஆண்டு டிசம்பரில் திருப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இதை எதித்து அவர்கள் தரப்பில் சென்னை ஹைகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து உத்தரவிட்டது. 5 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
மேல்முறையீடு எதிர்பார்ப்பு
இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படி தாக்கல் செய்தால் தனது தரப்பையும் வழக்கில் இணைத்துக்கொள்வேன் என்று கவுசல்யா பேட்டியளித்திருந்தார்.
Recommended Video
உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சங்கரின் சகோதரர் விக்னேஷ்வரன் சார்பில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் வழக்கறிஞர் பிரீதிகா திரிவேதி. அவர் கூறுகையில், உடுமலைப்பேட்டை சங்கரின் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான சின்னச்சாமியை விடுதலை செய்தும், 5 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தும் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார்.