உடுமலை சங்கர் ஆணவக்கொலை - கவுசல்யாவின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு
உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் மரணதண்டனை ரத்து செய்யப்பட்டு விடுதலையான கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி: உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் மரணதண்டனை பெற்று உயர்நீதிமன்றத்தால் விடுதலையான கவுசல்யாவின் அப்பா சின்னச்சாமி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தனது விடுதலையை எதிர்த்து தமிழக அரசு மனு தாக்கல் செய்தால் தனது தரப்பு வாதத்தை கேட்காமல் முடிவெடுக்கக் கூடாது என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் குமரலிங்கத்தைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் சங்கர், பழனியைச் சேர்ந்த சின்னசாமி மகள் கவுசல்யாவை காதலித்தார். சங்கர் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால் கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்பை பொருட்படுத்தாமல் சங்கரும் கவுசல்யாவும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி உடுமலை பேருந்து நிலையம் அருகே மனைவி கவுசல்யாவுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக இருவரையும் வெட்டி சாய்த்து தப்பித்து சென்றது. இந்த காட்சி அருகில் இருந்து சிசிடிவியில் பதிவாகியிருந்தது. சங்கர் வெட்டப்பட்ட வீடியோ காட்சி வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் சங்கர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே மரணமடைந்தார்.
படுக்காயங்களோடு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த கவுசல்யா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்தார். கணவரை கொன்ற குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவேண்டும் என்று கவுசல்யா போராடினார்.
உடுமலை சங்கர் படுகொலை வழக்கில் சாட்சியங்களை நிரூபிப்பதில் அரசுத் தரப்பு தவறிவிட்டது- மு.க.ஸ்டாலின்
சங்கர் ஆணவக்கொலை
இந்த படுகொலை தொடர்பாக கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, தாய் அன்னலட்சுமி, கவுசல்யாவின் மாமா பாண்டித்துரை மற்றும் மணிகண்டன், மைக்கேல் (எ) மதன், செல்வக்குமார், ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், பிரசன்னா, எம்.மணிகண்டன் ஆகிய 11 பேரைக் போலீசார் கைது செய்தனர்.
6 பேருக்கு தூக்கு தண்டனை
சங்கர் கொலை வழக்கு, திருப்பூர் வன்கொடுமைத் தடுப்பு வழக்குகளுக்கான திருப்பூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விசாரிக்கப்பட்டு வந்தது. 2017ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி, கவுசல்யாவின் தந்தை சின்னசாமி, ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல் (எ) மதன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதித்தார்.
கவுசல்யா சட்டப்போராட்டம்
ஸ்டீபன் தன்ராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த 11-வது குற்றவாளியான மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். கணவரை கொன்றவர்கள் பெற்றோர்கள், உறவினர்கள் என்று தெரிந்தும் கடைசி வரை போராடி வெற்றி பெற்றார் கவுசல்யா.
உயர்நீதிமன்றத்தில் அப்பீல்
மரண தண்டனையை உறுதி செய்வதற்காக இந்த வழக்கு உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கப்பட்டது. அதேபோல தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களும், மூவரின் விடுதலையை எதிர்த்து காவல்துறை தரப்பிலும் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மரணதண்டனை ரத்து
இந்த மனுக்கள் மீதான வாதங்கள் நடைபெற்று முடிந்து கடந்த வாரம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். முதல் குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர். அதேபோல், 9-வது குற்றவாளியான தன்ராஜ் மற்றும் 11வது குற்றவாளியான மணிகண்டன் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டனர். தூக்கு தண்டனை பெற்ற மற்ற 5 பேருக்கு குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி உள்ளிட்ட 3 பேரை விடுவித்து காவல்துறை தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.
அதிர்ச்சியான கவுசல்யா
சங்கர் ஆணவக்கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். தீர்ப்பு குறித்து கருத்து கூறியுள்ள கவுசல்யா, எனது சங்கர் கொலை வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது என்று கூறினார். இன்னமும் நீதிமன்றத்தின் மீது நான் நம்பிக்கை இழந்து விடவில்லை என்றும் கவுசல்யா கூறியுள்ளார்.
உயர்நீதிமன்றத்தில் அப்பீல்
தந்தை சின்னசாமியை உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் எனது தரப்பையும் வழக்கில் இணைத்துக்கொள்வேன்.கொலைக்கு தொடர்புடையவர்களுக்கு தண்டனை கிடைத்தால் தான் சங்கருக்கான நீதி கிடைக்கும் என்று கூறியிருக்கிறார் கவுசல்யா.
சின்னச்சாமி கேவியட் மனு
மரணதண்டனை ரத்து செய்யப்பட்டதை அடுத்து சிறையில் இருந்து விடுதலையான சின்னச்சாமி பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் உள்ள கொரோனா மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை சின்னச்சாமி தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் தனது விடுதலைக்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டால் தனது தரப்பு வாதத்தை கேட்காமல் முடிவெடுக்கக்கூடாது என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.