மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை பாஸ் செய்ய வேண்டும்: யுஜிசிக்கு ராகுல் காந்தி கோரிக்கை!!
டெல்லி: கொரோனா வைரஸ் வேகமாக பரவிக் கொண்டு இருக்கும்போது தேர்வுகளை நடத்தக் கூடாது என்றும், கல்வி ஆண்டில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பாஸ் செய்ய வேண்டும் என்று யுஜிசிக்கு காங்கிரஸ் கட்சின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. மரணங்களும் அதிகரிக்கிறது. இந்த நிலையில் நிலுவையில் இருக்கும் கடந்த கல்வி ஆண்டுக்கான தேர்வுகளையும், நடப்பாண்டில் நடத்தப்பட வேண்டிய தேர்வுகளையும் நடத்தலாமா வேண்டாமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால், இதற்கு தீர்வுதான் இல்லை. மாநில அளவில் முடிவுகளை மாநில கல்வித்துறை எடுத்து வரும் நிலையில், பல்கலைக்கழக தேர்வுகள் நடக்கும் என்று யுஜிசி அறிவித்து இருந்தாலும், ரத்து செய்ய வேண்டும் என்ற குரலும் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கைகளுக்கு யுஜிசி செவி சாய்க்க வேண்டும் என்றும், அவர்களது கோரிக்கைகளை ஏற்று தேர்வுகளை ரத்து செய்து, கல்வி செயல்திறன்கள் அடிப்படையில் மாணவர்களை பாஸ் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி யுஜிசிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு- சென்னை மருத்துவமனையில் அனுமதி
பாடத்திட்டம் குறைப்பு:
ஏற்கனவே ஒன்பதாம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு 30% சதவீதம் அளவிற்கு பாடங்களை குறைத்து சிபிஎஸ்இ அறிவித்து இருந்தது. பாடங்கள் குறைப்பு என்ற பெயரில் 11-ம் வகுப்பு அரசியல் அறிவியல், பாடத்தில் இடம்பெற்றிருந்த கூட்டாட்சி, குடியுரிமை, தேசியம் மற்றும் மதச் சார்பின்மை ஆகிய அத்தியாயங்கள் முழுமையாக நீக்கப்பட்டதற்கு தற்போது ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்தப் பாடங்கள் நிரந்தமாக நீக்கப்படவில்லை என்றும் நடப்பாண்டில் கொரோனா தாக்கத்தின் காரணமாகவே நீக்கப்பட்டு இருக்கிறது என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
யுஜிசி அறிவிப்பு:
கடந்த கல்வியாண்டு இறுதித் தேர்வுகளை ரத்து செய்ய பரிந்துரை செய்யப் போவதில்லை என்று யுஜிசி சமீபத்தில் அறிவித்து இருந்தது. இதுதொடர்பாக பல்கலை மானியக்குழு (யுஜிசி) வெளியிட்டு இருந்த அறிவிப்பில், ''இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும். வரும் கல்வி ஆண்டு தொடர்பான நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்" என்று தெரிவித்து இருந்தது.
ஆன்லைன் தேர்வு:
மேலும் அனைத்து பல்கலைக் கழகங்களும் தேர்வுகளை ஆன் லைனில் நடத்தி, ஆன்லைன், ஆஃப்லைன் அல்லது பிற வழிகளில் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று யுஜிசி அறிவித்து இருந்தது. இதற்கிடையே பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கான தேர்வுகளை நடத்த வேண்டும் என்று மத்திய உயர் கல்வித்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகமும் பரிந்துரை செய்து இருந்தது.
இந்த நிலையில் ராகுல் காந்தியும், பல்கலைக்கழக மாணவர்களுக்காக கோரிக்கை வைத்துள்ளார்.