கல்லூரி இறுதி தேர்வு...மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு...உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி பிரமாண பத்திரம்!
டெல்லி: பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வதற்கு மாநில அரசுகளுக்கு எந்த அதிகாராமும் இல்லை என்று மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் யுஜிசி பிராமண பத்திரம் ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. வரும் ஆகஸ்ட் மாதம் முழுவதும் மூடப்பட்டு இருக்கும் என்று நேற்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிகளில் இறுதித் தேர்வுகளில் மீதம் இருக்கும் பாடங்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்டு, கடந்த கல்வி ஆண்டில் எடுக்கபப்ட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சியை அறிக்குமாறு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பல்கலைக்கழக, கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் கேள்விக்குறியானது. இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டு, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இறுதியாண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இதை எதிர்த்து மாணவர்கள் சார்பில் வழக்கறிஞர் அனுபா ஸ்ரீவஸ்தவா சஹாய் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 31 மாணவர்கள் சார்பில் இவர் தாக்கல் செய்து இருந்தார். கொரோனா தொற்று நோய் பரவலுக்கு இடையே தேர்வு எழுதுவதற்கு மாணவர்களை கட்டாயப்படுத்துவது யுஜிசி வழிகாட்டுதலுக்கு எதிரானது என்று மாணவர்கள் தெரிவித்து இருந்தனர்.
இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணையின்போது, பதில் மனு தாக்கல் செய்யுமாறு யுஜிசிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்படி, யுஜிசி சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்யும் திட்டம் இல்லை. நடப்பாண்டில் வரும் செப்டம்பர் இறுதிக்குள் அனைத்து பல்கலைக்கழகங்களும் இறுதி செமஸ்டர் தேர்வை கட்டாயமாக நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு, செப்டம்பரில் தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு வேறு தேதி ஒன்றில் வாய்ப்பு வழங்க வேண்டும். இறுதியாண்டு தேர்வை ரத்து செய்தால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை நிராகரிக்க கி. வீரமணி முன்வைக்கும் 4 காரணங்கள்
மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களில், இளங்கலை, முதுகலை மாணவர்களின் தேர்வை ரத்து செய்துள்ளனர். தேர்வை நடத்தாமல் மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்குவது யுஜிசி வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு முரணானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.