என்ன செஞ்சும் கட்டுப்படுத்த முடிய, தீயாக பரவும் உருமாறிய கொரோனா... விழிபிதுங்கி நிற்கும் உலக நாடுகள்
என்ன செஞ்சும் கட்டுப்படுத்த முடியாத, தீயாக பரவும் உருமாறிய கொரோனா... விழிபிதுங்கி நிற்கும் உலக நாடுகள்
டெல்லி: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா மிக வேகமாக மற்ற நாடுகளுக்கும் பரவி வருவதால் உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன.
உலகெங்கும் கொரேனா வைரஸ் பாதிப்பு இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் சுமார் 1.93 லட்சம் பேருக்குப் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல பிரேசில் நாட்டில் 58 ஆயிரம் பேருக்கும், பிரிட்டனில் 39 ஆயிரம் பேருக்கும், ரஷ்யாவில் 29 ஆயிரம் பேருக்கும் புதிதாக கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் நிச்சயம் இறுதி பெருந்தொற்றாக இருக்காது... எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு
உருமாறிய கொரோனா
பிரிட்டன் நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் புதிய வகை கொரோனா வைரசை கண்டுபிடித்தனர். இந்த உருமாறிய கொரோனா மற்ற கொரோனா வகைகளைவிட 70% வேகமாகப் பரவுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேகமாக பரவும், ஆனால் அதிக ஆபத்தானது இல்லை
பல்வேறு நாடுகளிலும் ஏற்கனவே கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தடுப்பு மருந்துகளுக்குக் கட்டுப்படுமா என்ற கேள்வியும் எழுந்தது. இதற்குப் பதிலளித்த ஆராய்ச்சியாளர்கள், ஏற்கனவே உள்ள தடுப்பு மருந்துகளுக்கும் இந்த உருமாறிய கொரோனா கட்டுப்படும் என்றும் இவை வேகமாகப் பரவுகிறதே தவிர அதிக ஆபத்தானது இல்லை என்றும் தெரிவித்தனர்.
பல நாடுகளுக்கும் பரவும் உருமாறிய கொரோனா
உருமாறிய கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு நாடுகளும் பிரிட்டனுடனான போக்குவரத்திற்கு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இருப்பினும், ஏற்கனவே இந்த உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு பிரான்ஸ், டென்மார்க். ஸ்பெயின், சுவீடன், நெதர்லாந்து, வடக்கு அயர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூக பரவலான உருமாறிய கொரோனா
கனடாவில் இரண்டு பேருக்கு இந்த உருமாறிய கொரோனா வைரசின் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சமீப காலங்களில் எந்த வெளிநாடுகளுக்கும் பயணிக்கவில்லை. அதாவது வெளிநாடுகளுக்குச் சென்று வந்த மற்றவர்கள் மூலம் இவர்களுக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா சமூக தொற்றாக மாறினால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அந்நாட்டு அரசு ஆலோசித்து வருகிறது.
அமெரிக்காவில் புதிய வகை கொரோனா
அமெரிக்காவில் இதுவரை உருமாறிய கொரோனா கண்டறியப்படவில்லை. ஆனால், அந்நாட்டில் உருமாறிய கொரோனா குறித்த சோதனைகள் மிக மிகக் குறைவாக நடைபெறுவதாலேயே, இன்னும் அது உறுதி செய்யப்படவில்லை என்றும் உருமாறிய கொரோனா ஏற்கனவே அமெரிக்காவிற்குள் வந்திருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனிலிருந்து வருபவர்கள் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதை நாட்டிற்குள் நுழைந்து 72 மணி நேரத்தில் நிரூபிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் புதிய வகை கொரோனா
பிரிட்டனில் கண்டறியப்பட்டதை போலவே தென் ஆப்பிரிக்காவிலும் மற்றொரு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது பிரிட்டன் கொரோனா வைரசைப் போலவே மிக வேகமாகப் பரவக் கூடியது என்றும் தென் ஆப்பிரிக்க வகை கொரோனா குறித்துக் கூடுதல் ஆய்வுகளை நடத்தி வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.