அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்கவில்லை.. பிரதமர் கிளம்பி சென்ற பிறகு செல்வேன்- உமா பாரதி
டெல்லி: பிரதமரின் பாதுகாப்பு காரணமாக அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று பாஜக மூத்த தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விஷயத்தில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களைப்போல, உமா பாரதி முன்னிலையில் இருந்தார். இதற்கான தீவிரமான பிரச்சாரங்கள் மற்றும் முன்னெடுப்புகளை அவர் மேற்கொண்டு வந்தார்.
இந்த நிலையில்தான், டுவிட்டரில் இந்த தகவலை அவர் கூறியுள்ளார்.
அயோத்தி ராமர் கோவில்.. பூமி பூஜை.. அத்வானிக்கே அழைப்பு இல்லையாம்.. ஷாக்கில் தொண்டர்கள்!
அமித் ஷாவுக்கு கொரோனா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல பாஜக தலைவர்களுக்கு கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. எனவே அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கக் கூடிய தலைவர்களுக்கு கொரோனா பரவி விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு அதிகரிக்கிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி இதில் பங்கேற்பதால் கூட்டம் சேர்ந்து ஒரு தொற்று பரவிவிடக்கூடாது என்று நினைக்கிறேன்.
பிறகு செல்வார்
நான் மத்தியப்பிரதேச மாநிலம் போபால் நகரிலிருந்து உத்தரப் பிரதேசத்துக்கு ரயில் மூலமாக பயணிக்க உள்ளேன். பிரதமர் உள்ளிட்டோர் பங்கேற்கும் பூமி பூஜை விழாவில், நான், பங்கேற்க போவதில்லை. அவர்கள் கிளம்பிச் சென்ற பிறகு அந்த இடத்துக்கு சென்று வழிபாடு செய்வேன். அதுவரை சரயு நதிக்கரையில் நான் இருப்பேன். இவ்வாறு உமா பாரதி ட்வீட்டுகளை வெளியிட்டுள்ளார்.
அத்வானிக்கு அழைப்பு
அயோத்தியில் ராமர் கோவில் அறக்கட்டளை சார்பில் கடந்த சனிக்கிழமை அத்வானி மற்றும் முரளிமனோகர் ஜோஷி ஆகியோருக்கு தொலைபேசி மூலமாக, பூமி பூஜை விழாவில் பங்கேற்பதற்காக முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக விழாவில் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
குற்றச்சாட்டு
அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளவர்களில், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகிய தலைவர்களும் உண்டு. கடந்த வாரம் இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் அவர்கள் தங்கள் வாக்குமூலத்தை அளித்தனர். 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாபர் மசூதி, கர சேவகர்களால் இடிக்கப்பட்டது. இதற்கான தூண்டுதலை இந்த தலைவர்கள் முன்னெடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பூமி பூஜை
வரும், புதன்கிழமை நடைபெற உள்ள அயோத்தி பூமி பூஜை நிகழ்வில் 40 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கல்லை அடிக்கல்லாக, பிரதமர் நரேந்திர மோடி நாட்டுவார். இந்த விழாவில் பங்கேற்க உள்ள விஐபிகள் எண்ணிக்கை 50ஆக குறைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.