சீர்திருத்தங்களை செய்யாமல் போனால் ஐ.நா மீதான நம்பகத்தன்மையும் போய்விடும்... மோடி
டெல்லி: ஐக்கிய நாடுகள் சபையின் உண்மையான லட்சியம் இன்னும் நிறைவடையவில்லை; அதனால் ஐநா சபையையே சீர்திருத்த வேண்டிய தேவை இருக்கிறது; இல்லையெனில் ஐநா அமைப்பு மீதான நம்பிக்கை போய்விடும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
ஐக்கிய நாடுகளின் சபையின் 75-வது ஆண்டை முன்னிட்டு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதமர் மோடியின் உரை குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஐஐடிகள் முதல் நவோதயா பள்ளிகள் வரை.. கல்வி நிறுவனங்களிடமிருந்து பல கோடி நிதி பெற்ற 'பிரதமர் கேர்ஸ்'
இந்தியாவின் பங்கு
எழுபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன், போரின் பயங்கரங்களில் இருந்து ஒரு புதிய நம்பிக்கை எழுந்தது. மனிதகுல வரலாற்றில் முதல் முறையாக, ஒட்டுமொத்த உலகத்துக்கான ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சாசனத்தில் தொடக்கத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் ஒன்று இந்தியா.
ஐநா அமைதிப் பணியில் இந்தியா
அனைவரையும் ஒரு குடும்பமாக பார்க்கும் இந்தியாவின் சொந்த தத்துவமான 'வசுதேவ குடும்பத்தை' அது பிரதிபலித்தது. ஐக்கிய நாடுகள் சபையினால் உலகம் தற்போது ஒரு சிறந்த இடமாக இருக்கிறது. ஐநா அமைதி இயக்கங்களில் முன்னணி பங்களிப்பவராக இந்தியா இருந்துள்ளது.
சீர்திருத்தம் தேவை
நிறைய சாதிக்கப்பட்ட போதிலும், உண்மையான லட்சியம் இன்னும் நிறைவடையவில்லை. மோதல்களைத் தடுப்பதிலும், வளர்ச்சியை உறுதி செய்வதிலும், பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதிலும், சமநிலையின்மையை குறைப்பதிலும், டிஜிட்டல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதிலும் இந்தப் பணி இன்னும் செய்யப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையையே சீர்திருத்த வேண்டிய தேவை இருக்கிறது.
விரிவான சீர்திருத்தங்கள்
காலாவதியான அமைப்புகளின் மூலம் இன்றைய சவால்களை எதிர்த்து நம்மால் போரிட முடியாது. விரிவான சீர்திருத்தங்கள் இல்லாவிட்டால், நம்பிக்கையின்மை சிக்கலை ஐநா எதிர்கொள்ளும். இன்றைய உலகத்துக்கு, இன்றைய உண்மைகளை பிரதிபலிக்கக்கூடிய; அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் குரல் கொடுக்கக் கூடிய; புதிய சவால்களை எதிர்கொள்ளக் கூடிய; மற்றும் மனிதகுல நலனின் மீது கவனம் செலுத்தக் கூடிய சீர்திருத்தப்பட்ட பன்முகத்தன்மை நமக்கு வேண்டும். இதை அடைவதற்காக அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணிபுரிய இந்தியா விரும்புகிறது. இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.