சீனா, ஆசிய பசிபிக் பகுதி நாடுகளை விட இந்தியாவில் வேலையின்மை விகிதம் குறைவு.. மத்திய அரசு
டெல்லி: நாடு முழுவதும் 6.84 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதில் ரயில்வே துறையில் மட்டும் 2.6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.
17-வது மக்களவை பொறுப்பேற்ற பின்னர் கடந்த 17-ம் தேதி முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கி சுமூகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவையில், நாடு முழுவதும் நிலவும் வேலைவாய்ப்பு பற்றாக்குறை மற்றும் அரசு வேலைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பின.
எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு மத்திய தொழிலாளர், மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார், எழுத்துபூர்வ பதில் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த பதிலில் கடந்த 2018 மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டு நிலவரப்படி, நாடு முழுவதும் அரசு பணிகளில் 38.03 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதாக கூறியுள்ளார்.
இதில் தற்போது வரை 31.19 லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பபட்டுள்ளன. எஞ்சிய 6.84 லட்சம் அரசு பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில் அதிகபட்சமாக 2.6 லட்சம் பணியிடங்கள் ரயில்வே துறையில் காலியாக உள்ளன. வேலைவாய்ப்புகளை உருவாக்குவது தான் அரசின் முக்கிய குறிக்கோள்.
எனவே அரசு பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்புவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என மத்திய அமைச்சர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை குறித்து தகவல் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார், சீனா மற்றும் ஆசியா பசிபிக் நாடுகளை விட இந்தியாவில் வேலையின்மை குறைவாகவே உள்ளது என கூறியுள்ளார். கேள்வி நேரத்தின் போது பதிலளித்து பேசிய அமைச்சர் கங்வார், வேலையின்மை விகிதம் இந்தியாவில் 3.5 சதவீதமாகவும், சீனாவில் 4.7 சதவீதமாகவும், ஆசிய பசிபிக் பகுதியில் 4.2 சதவீதமாகவும் உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் பேசிய அமைச்சர் ஐ.எல்.ஓ அறிக்கையின்படி, உலகளவில் இந்தியாவில் வேலையின்மை விகிதம் குறைந்தே காணப்படுகிறது. இவ்விகாரத்தில் மற்ற நாடுகளை விட இந்தியா சிறந்த நிலையில் தான் உள்ளது.
எனினும் இத்தகவலால் நாங்கள் திருப்தி அடைந்துவிடவில்லை. அரசு வேலைகளில் நிலவும் காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்புவதிலும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதிலும் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக கூறியுள்ளார்.