இரு நாட்டு உறவை பதம் பார்த்த 2020.. தாறுமாறாக வென்ற இந்தியாவின் ராஜாங்க வலிமை.. ஏமாற்றமடைந்த சீனா!
டெல்லி: இந்தியா - சீனா இரண்டு நாட்டு உறவில் 2020ம் ஆண்டு மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. 2019 அக்டோபர் மாதம்தான் சீன அதிபர் ஜி ஜிங்பிங் இந்தியா வந்தார். ஆனால் வெகு சில மாத இடைவெளியில் இரண்டு நாட்டு உறவு மோசமான சரிவை சந்தித்துள்ளது.
இந்த வருட தொடக்கத்தில் இருந்தே இரண்டு நாட்டு உறவு அத்தனை உவப்பானதாக இல்லை என்றுதான் கூற வேண்டும். அதிலும் கொரோனா பரவலுக்கு பின் சர்வதேச அளவில் இந்தியாவை சீனா எதிரியாக பார்க்கும் நிலை ஏற்பட்டது.
இந்தியாவும் தனது வலிமையான ராஜாங்க உறவு மூலம் சீனாவிற்கு மிகப்பெரிய நெருக்கடி கொடுத்தது. இரண்டு நாட்டு அதிகார மோதல் தற்போது எல்லை மோதலாகவும் விரிவடைந்து உள்ளது.
எங்கள் நாட்டில் சீனா ஊடுருவி ஆக்கிரமிப்பு கிராமத்தை உருவாக்கவில்லை: இந்தியாவுக்கான பூட்டான் தூதர்
மே 5ம் தேதி
இரண்டு நாட்டிற்கும் இடையில் எல்லையில் மோதல் வந்தது மே 5ம் தேதிதான். சீனாவின் ஹெலிகாப்டர் இந்திய எல்லையில் அன்று அத்துமீறியது. அதன்பின் சிக்கிம் பின் லடாக் இருக்கும் பாங்காங் திசோ, கல்வான் போன்ற பகுதிகளில் இரண்டு நாடுகளும் எல்லைக்காக மோதிக்கொண்டது என்று இந்த வருடம் நிறைய சம்பவம் நடந்தது.
20 பேர் பலி
இந்த சண்டை விஸ்வரூபம் எடுக்கவே கல்வானில் இரண்டு நாட்டுக்கும் இடையில் மோதல் வந்தது. அமைதி பேச்சுவார்த்தை நடக்கும் என்று நினைத்து சென்ற இந்திய வீரர்களை சீனா தாக்க.. 20 இந்திய வீரர்கள் கல்வானில் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 100 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்றும் செய்திகள் வந்தது.
மோதலுக்கு ரெடி
இதையடுத்து இந்தியா பெரிய மோதலுக்கு தயார் ஆனது. போர் மேகங்கள் சூழ்ந்தது. என்ன நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று சீன எல்லையில் படைகளை குவித்தது. அதோடு சீனாவை விட துரிதமாக செயல்பட்டு பாங்காங் திசோவில் இருக்கும் பெரும்பாலான மலைகளை இந்தியா கைப்பற்றியது. இந்தியாவின் இந்த ராணுவ பலத்தை பார்த்து சீனா அசந்து போனது. இந்தியாவை அடக்கலாம் என்று நினைத்த சீனா இந்திய வீரர்களின் வேகத்தை பார்த்து அடங்கியது.
பேச்சுவார்த்தை
அதே சமயம் இன்னொரு பக்கம் இந்தியா பேச்சுவார்த்தையும் நடத்தி வந்தது. மேஜர், லெப்டினன்ட் ஜெனரல் தலைமையிலான கூட்டங்கள் நடந்தது. இதெல்லாம் போக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மீட்டிங்கிற்கு பின் சீனா மொத்தமாக ஒடுங்கியது. குளிர் காலத்திலும் உறுதியாக இருக்கும் இந்திய வீரர்களை பார்த்து சீன படைகளே நடுங்கியது.
ராஜாங்க உறவு
இதெல்லாம் போக சீனாவை ராஜாங்க ரீதியாகவும் இந்தியா வளைத்தது. சீனாவின் தென் கடல் எல்லை அருகே இந்தியா போர் கப்பலை அனுப்பியது. ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என்று வல்லரசு நாடுகளை கைக்குள் போட்டு சீனாவை கட்டுப்படுத்தியது. இந்தியாவின் ராஜாங்க ரீதியான மூவ்களை எதுவும் செய்ய முடியாமல் சீனா இறங்கிப்போனது.
இந்தியாதான் கெத்து - உறவு நீடிக்குமா
இதன் காரணமாக பேச்சுவார்த்தைதான் ஒரே தீர்வு என்று சீனா இறங்கி வந்துள்ளது. இதுவரையிலான மோதலில் இந்தியாவின் ராஜாங்க வலிமையே வென்றுள்ளது. சீனா - இந்தியா உறவை 2020ம் ஆண்டு மொத்தமாக உடைத்து போட்டுள்ளது. சீனாவின் ஆதிக்க மனோபாவம் மாறும் வரை இரண்டு நாட்டு உறவில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. இரண்டு நாடுகளும் இப்படியேதான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.