பட்டு துணியை நெய்தவருக்கு புது துணி இல்லை.. சிவகாசி தொழிலாளி குழந்தைக்கு பட்டாசு இல்லை.. கொரோனா வடு
டெல்லி: தீபாவளி பண்டிகைக்காக துணியை நெய்தவர்கள், பட்டாசு தயாரித்தவர்கள், இன்னும் பிற தொழிலாளர்களின் வீடுகளில் பண்டிகையை கொண்டாட முடியாமல் இருளில் மூழ்கடித்த கொரோனாவை மறக்க முடியுமா?
கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. சீனாவிலிருந்து பரவி கிட்டதட்ட 200-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் தொற்றுநோய் போல் பரவும் அபாயம் உள்ளதால் உலக நாடுகள் லாக்டவுனை அறிவித்தன.
அது போல் இந்தியாவில் லாக்டவுன் முறை திடீரென அறிவிக்கப்பட்டதால் வேலையின்றி வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தவித்தனர்.
சென்னை தாம்பரத்தில் சோகம்.. வீட்டின் முன் விளையாடிய 3 வயது குழந்தை வாகனம் மோதி மரணம்!
ஊதியம் இல்லை
வேலையும் இல்லாமல் ஊதியமும் இல்லாமல் ஒரு வேளை உணவுக்கும் குழந்தையின் பால் செலவிற்கும் அல்லாடினர். மளிகை பொருள்கள் இருக்கும் வரை சமைத்து உண்டனர். பின்னர் பொருட்கள் தீர்ந்து போனதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாடகை கொடுக்க முடியாமல் உண்ண உணவின்றியும் தவித்தனர்.
டெல்லி
இதனால் போக்குவரத்து இல்லாவிட்டாலும் நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்கு பல நூறு கி.மீட்டர் பயணம் செய்தனர். இந்தப் பயணத்தில் குழந்தைகள், பெரியவர்கள், கர்ப்பிணிகள் இருந்தனர். காலில் செருப்பு கூட இல்லாமல் தலைநகர் டெல்லி வழியாக இவர்கள் நடந்து சென்றது கொடூரத்திலும் கொடுமை.
உணவை வாங்க கியூ
எங்கோ தன்னார்வலர்கள் கொடுக்கும் உணவை வாங்க நீண்ட வரிசையில் நின்று அரை வயிறும் கால் வயிறுமாக குழந்தைகளுக்காவது உணவு கிடைத்தால் போதும் என்ற எண்ணத்துடன் இவர்கள் செயல்பட்டது நெஞ்சை பதற வைத்தது. இதே போல் இந்தியா முழுவதும் உள்ள தறி நெய்யும் தொழிலாளர்கள், வீடு கட்டும் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், செக்யூரிட்டி பணியில் இருந்த தொழிலாளர்கள், பட்டாசு தயாரிக்கும் தொழிலாளர்கள், ஹோட்டலில் பணியாற்றும் தொழிலாளர்கள் என பெரும்பாலானோர் அல்லாடினர்.
பொருளாதாரம்
கிட்டதட்ட இந்த 7 மாதங்களில் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்தியாவில் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டன. அதன்படி தொழிற்சாலைகள், தொழில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையும் வந்தது. பண்டிகை என்பது வசதிகேற்ப விதவிதமாக கொண்டாடப்படுவதாகும்.
தீபாவளி
பணக்காரர்கள் பனாரஸ் பட்டு வாங்கினால் ஏழைகள் நூல் துணியாவது வாங்கி அணிவார்கள். ஆனால் இந்த முறை தளர்வுகள் அளிக்கப்பட்டு மக்கள் வேலைக்கு சென்றாலும் கொரோனா லாக்டவுன் போது குடும்பச் செலவிற்கு வாங்கிய கடனை அடைக்கவே இந்த வருமானம் சரியாக இருக்கும் நிலையில் இவர்கள் எல்லாம் தீபாவளி கொண்டாட முடியவில்லை.
குழந்தைகள்
நமக்கு துணி நெய்தவர்களின் குழந்தைகள் புது துணியில்லாமல் கண்களில் வருத்தத்துடன் காணப்பட்டனர். அது போல் பட்டாசு தொழிற்சாலைகளில் பணியாற்றியவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பட்டாசு வாங்கித் தர கூட இயலாத நிலை ஏற்பட்டது. இது போல் அனைத்து தரப்பு மக்களையும் துவம்சம் செய்த கொரோனாவை மறக்க முடியுமா?