விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு அரசு எப்பவும் ரெடி... ஆனாஒரு கண்டிஷன்- நரேந்திர சிங் தோமர்!
டெல்லி: வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தி வைத்து, ஒரு கூட்டுக்குழு மூலம் இரு தரப்புக்கு இடையிலான பிரச்சினைகளை களைவது தொடர்பான எங்களது கோரிக்கைக்கு விவசாயிகள் செவிசாய்த்தால் அரசு பேச்சுவார்த்தை உடனடியாக தொடங்கும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.
விவசாயிகள் மற்றும் விவசாயத்தின் நலனுக்காக அரசு உறுதிபூண்டுள்ளது என்றும் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
டெல்லியில் தொடர் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 70 நாளுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது.ஆனால் இதில் எதிலும் நல்ல முடிவு கிடைக்கவில்லை.
திசைமாறிய டிராக்டர் பேரணி
இதற்கிடையே குடியரசு தினம் அன்று நடைபெற்ற டிராக்டர் பேரணி திசைமாறி வன்முறையாக வெடித்தது. போராட்டக்காரர்கள் கூட்டத்தில் விஷமிகள் புகுந்ததால் போலீசார் தடியடி நடத்தினார்கள். பலர் டெல்லி செங்கோட்டையை சென்று அங்கு காலிஸ்தான் கொடிகளை ஏற்றியதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் சில விவசாய சங்கங்கள் போராட்டத்தில் இருந்து விலகின.
அடுத்தக்கட்டத்துக்கு நகர்வு
ஆனாலும் பெரும்பாலான விவசாய சங்கங்கள் டெல்லியின் சிங்கு, திகிரி உள்ளிட்ட பல்வேறு எல்லைகளில் தொடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டத்தை திரும்ப பெறும் வரையில் ஓயப்போவதில்லை என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இந்த நிலையில் இந்த போராட்டத்தை தீவிரமாக அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு தயார்
மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் 40 லட்சம் விவசாயிகள் டிராக்டர்களில் நாடாளுமன்றம் நோக்கி அணிவகுத்து செல்வார்கள் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்தார். இது குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:- அரசு விவசாயிகளுடன் கருணையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வருகிறது. இன்றும் கூட விவசாயிகள் தலையை ஆட்டும் வேளையில் அரசு எப்போதும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது.
விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும்
வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தி வைத்து, ஒரு கூட்டுக்குழு மூலம் இரு தரப்புக்கு இடையிலான பிரச்சினைகளை களைவது தொடர்பான எங்களது கோரிக்கைக்கு விவசாயிகள் செவிசாய்த்தால் அரசு பேச்சுவார்த்தை உடன்டியாக தொடங்கும். விவசாயிகள் மற்றும் விவசாயத்தின் நலனுக்காக அரசு உறுதிபூண்டுள்ளது. நரேந்திர மோடியின் தலைமையில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும், விவசாயத் துறையை வலுப்படுத்தவும் அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.