2021 பட்ஜெட்.. ரெடியாகும் நிர்மலா சீதாராமன்.. தனி நபர் வருமான வரி விகிதம் மாறுமா?
டெல்லி: 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுமா என்பது சம்பளதாரர்களின் பலத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
கொரோனா காலகட்டத்தால், பல நிறுவனங்களும், ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்தன. மக்கள் வழக்கமான செலவீனங்களை மேற்கொள்ள நிறைய சிரமப்பட்டனர். தற்போதுதான் நிலைமை மேம்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாத ஊதியதாரர்களுக்கு பலன் தரும் வகையில், 2021ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்படுமா என்பது பலரது கேள்வியாக உள்ளது.
வருமான வரி மாற்றங்கள்
பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். வருமான வரி செலுத்த ஆண்டுக்கு குறைந்தது 2.5 லட்சத்துக்கு மேல் வருமானம் இருக்க வேண்டும் என்ற விதிமுறை 3 லட்சம் அல்லது 4 லட்சம் என மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டன.
வருமான வரி ஸ்லேப்
இப்போது 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வருவாய் ஈட்டுவோருக்கு 5% வருமான வரி பெறப்படுகிறது. 5 லட்சம் முதல் 10 லட்சம் வருவாய் பெறுவோரிடம் 20% வருமான வரி பெறப்படுகிறது. 10 லட்சத்திற்கு அதிகமான வருமானம் ஈட்டுவோரிடம் 30% வருமான வரி பெறப்படுகிறது.
மக்கள் எதிர்பார்ப்பு
இதில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால் மக்களுக்கு நல்லது என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதாவது 5 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோரிடம் வருமான வரி பெறாமல் தவிர்ப்பது, 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் வருவாய் ஈட்டுவோரிடம் 10 சதவீதம் மட்டும் வருமான வரி பெறுவது உள்ளிட்ட சலுகைகளை அறிவிப்பாரா நிர்மலா சீதாராமன் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
வருமான வரி விகிதம்
அதேநேரம், முன்னணி பொருளாதார ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான தகவல்படி, தனி நபர் வருமான வரி விகிதங்களில் நிதியமைச்சர் எந்த மாற்றமும் செய்யப்போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலவுக்காக தனியாக செஸ் வரி விதிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இரட்டை நெருக்கடியில் பொது மக்கள் இருக்கிறார்கள்.