2024 தேர்தல் தான் குறியே.. பக்கா பிளானோடு பட்ஜெட்டை ‛பாஸ்’ செய்த பாஜக.. பின்னணியில் இவ்வளவு விஷயமா?
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்ட நிலையில் இந்த ஆண்டு நடக்கும் 9 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் வரும் 2024ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றின் மக்கள் மனதை வெல்லும் வகையில் பல விஷயங்கள் இந்த பட்ஜெட் உரையில் இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2023-2024ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் 2.O ஆட்சியின் கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும். இதனால் இந்த ஆண்டு நடக்கும் 9 மாநில சட்டசபை தேர்தல் மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் மனதை கவரும் வகையிலான அறிவிப்புகள் இடம்பெறலாம் என்ற தகவல்கள் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக வெளியாகின.
தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்து முடித்துள்ளார். இந்நிலையில் தான் பட்ஜெட்டில் இடம்பெற்ற அம்சங்களை அறிந்து மக்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் உண்மையில் இந்த பட்ஜெட்டானது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்துள்ளதா? இல்லாவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளதா? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளன.
“ஷாக்” கொடுத்த நிர்மலா.. பட்ஜெட்டில் 100 நாள் வேலைக்கான நிதி குறைப்பு! 6 ஆண்டுகளில் ரொம்ப கம்மி
50:50 சதவீதம்
தற்போதைய பட்ஜெட்டில் மேக்ரோ பொருளாதாரத்தை பலப்படுத்துதல், பசுமை ஆற்றலுக்கு நாட்டை தயார் செய்தல், நேரடி வரி குறைப்புகள் வழங்கல், நாட்டின் எதிர்கால தேவைக்கான தொழில்நுட்பங்களில் முதலீடு செய்தல், உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முயற்சி உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல், பணவீக்கம், வேலையிழப்பு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நடுவேயும் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த பட்ஜெட்டானது அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் 50:50 என்ற அளவில் அமைந்துள்ளது.
தேர்தலை அடிப்படையாக வைத்து..
இருப்பினும் கூட பாஜக தேர்தலை மனதில் வைத்து இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது என்பதையும் நாம் புறக்கணித்துவிட முடியாது. பொதுவாக மேலோட்டமாக பார்த்தால் இது தெரியாது. மாறாக உள்ளார்ந்து யோசித்து பார்த்தால் தேர்தலை மனதில் வைத்து தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். அதாவது நாட்டில் தற்போது நடுத்தர வர்க்கம் மற்றும் மாத சம்பளம் வாங்குவோர், அரசு பணிகளில் இருப்பவர்கள், முக்கியமானவர்களாக உள்ளனர். அந்த வகையில் தான் தற்போது புதிய வருமான வரி விதியின்படி ரூ.7 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி இல்லை என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அடித்தட்டு மக்கள் மீதான கருணை
மேலும் கொரோனா பரவல் காலத்தில் 800 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்) மக்களுக்கு 28 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டது. 120 மில்லியன் கழிப்பறைகள் கட்டி கொடுத்தது. 96 மில்லியன் வீடுகளுக்கு எரிவாயு சிலிண்டர்கள் இணைப்பு வழங்கியது. 114 மில்லியன் விவசாயிகளுக்கு ரூ.2.2 லட்சம் கோடி வங்கி கணக்கில் பணம் வழங்கியது. பிரதமரின் கிராமப்புற வீடுகள் கட்டும் திட்டம் 66 சதவீதம் வரை அதிகரித்து மதிப்பீடு ரூ.79,000 கோடியாக உள்ளது என நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் குறிப்பிட்டு இருந்தார். இது ஏழை, விவசாயிகள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் மீது மத்திய அரசுக்கு இருக்கும் கருணையை அவர் வெளிக்காட்டி உள்ளார்.
பழங்குடியின மக்களுக்கு முக்கியத்துவம்
மேலும் கைவினை கலைஞர்களுக்கான கைவினை பொருட்களின் மீதான முதலீடு பற்றி நிர்மலா சீதாராமன் பேசினார். அப்போது ஓபிசிக்கள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பெண்கள் பயனடைவது பற்றி அவர் விரிவாக விளக்கி இருந்தார். மேலும் தற்போது அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அரசு மறக்காமல் இருப்பதை நிர்மலா சீதாராமன் நினைவுப்படுத்தி உள்ளார். பழங்குடி குழுக்கள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 748 பழங்குடியினர் பள்ளிகளுக்கு 3,800 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று அறிவித்ததன் மூலம் பழங்குடியின மக்களின் நம்பிக்கையை பெற மத்திய அரசு முயற்சித்து உள்ளது. மேலும் இந்த ஆண்டு வடகிழக்கு மற்றும் மத்திய இந்திய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கணிசமான அளவு பழங்குடியின மக்கள் உள்ள நிலையில் இதுபோன்ற அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவுக்கு சிறப்பு நிதி
இந்த பட்ஜெட்டில், கர்நாடக மாநிலத்தில் பாசனம் மற்றும் குடிநீர்திட்டங்களுக்கு ரூ.5 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும், கர்நாடக மாநில விவசாயிகளின் வறட்சிக்காக ரூ.5,300 கோடி சிறப்பு நிதியாக வழங்கப்படவுள்ளது எனவும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். கர்நாடகாவுக்கு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த அறிவிப்பின்போதே எதிர்க்கட்சியினர் கோஷமிட்டனர். அதாவது கர்நாடகாவுக்கான சிறப்பு நிதி அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டபோது, இது தேர்தலுக்கான அறிவிப்பு என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில் முனைவோருக்கு ஆதரவு
மேலும் விவசாயக் கடன் இலக்கை அதிகரிப்பதாகவும் டிஜிட்டல் முறையில் வேளாண் துறை மேம்படுத்தப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் விவசாயிகளை அரவணைக்க பாஜக முயற்சித்துள்ளது. மேலும் எம்எஸ்எம்இக்கான கடன் உத்தரவாதத்தை விரிவுப்படுத்தியதன் மூலம் அதில் உள்ளவர்களை ஈர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஸ்டார்ட்அப்களுக்கு சலுகை அறிவிப்பு, புதிய ஆய்வு, ஆய்வகங்கள் தொடர்பான அறிவிப்புகள் மூலம் புதிய துறைகளில் தொழில்முனைவோருக்கு அரசு வாய்ப்பு வழங்குகிறது என்பதை நிர்மலா சீதாராமன் வெளிக்காட்டி உள்ளார்.
இந்தியா மீதான நம்பிக்கையை அதிகரிக்க..
மேலும் உலகளவில் இந்தியாவின் பொருளாதாரம் 10வது இடத்தில் இருந்து 5வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஜி 20 மாநாடு இந்தியாவில் நடப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதன்மூலம் இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பான நிலையில் உள்ளதாகவும், உலக நாடுகளின் மத்தியில் இந்தியா மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளதையும் அவர் வெளிக்காட்டி உள்ளார். மேலும் கடந்த 2018 கடைசி இடைக்கால பட்ஜெட்டில் பிரமதர் கிஷான் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தேர்தலுக்கு 2 மாதங்களுக்கு முன்பு இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் அது பாஜகவுக்கு பிளஸ் பாயிண்டாக அமைந்தது. அந்த வகையில் தான் தற்போது சில முக்கிய விஷயங்களை தேர்தல் அரசியல் ரீதியாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.