அதிகார வர்க்கத்தினரை திருப்திப்படுத்தும் பட்ஜெட்! இதில் ஏழைகளுக்கு எதுவுமே இல்லை- ப.சிதம்பரம் தாக்கு
டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்த நிலையில், எதிர்க்கட்சிகள் இதை மிகக் கடுமையாகச் சாடி வருகிறது. இதற்கிடையே முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் இந்த பட்ஜெட் அதிகார வர்க்கத்தினரை மட்டுமே மகிழ்ச்சியடையச் செய்யும் பட்ஜெட்டாக இருப்பதாக விமர்சித்துள்ளார்.
2025- 2026 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை இன்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது.

இந்த மத்திய பட்ஜெட்டை ஆளும் தரப்பினர் வரவேற்றுள்ள அதே சூழலில் எதிர்க்கட்சியினர் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். இதற்கிடையே முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரமும் மத்திய பட்ஜெட் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
ப. சிதம்பரம் விமர்சனம்:
இது குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் மேலும் கூறுகையில், "இந்த பட்ஜெட் வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினரையும் பீகார் மக்களையும் மட்டுமே கவர்ந்திழுக்கிறது. அவர்கள் மட்டுமே இந்த அறிவிப்புகளை வரவேற்பார்கள். அதேநேரம் நாட்டின் பிற பகுதிகளில் வாழும் மக்களுக்கு, பாஜக எம்பிக்களின் இடைவிடாத கைதட்டல்களும் நிதியமைச்சர் ஆறுதலான வார்த்தைகளும் மட்டுமே இருக்கிறது..
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டதை விட, திருத்தப்பட்ட வரி வருவாய் ரூ.41,240 கோடி குறைந்துள்ளது. அதேபோல திருத்தப்பட்ட நிகர வரி ரூ.26,439 கோடி குறைந்துள்ளது. மறுபுறம் செலவுகளைப் பொறுத்தவரை மொத்த செலவினம் ரூ.1,04,025 கோடி குறைத்துள்ளனர். மூலதனச் செலவு ரூ.92,682 கோடி, சுகாதாரத் துறைக்கு ரூ.1,255 கோடி, கல்வித் துறைக்கு ரூ.11,584 கோடி, சமூக நலனுக்கு ரூ.10,019 கோடி, வேளாண்மைக்கு ரூ.10,992 கோடி எனப் பல முக்கிய திட்டங்களுக்கான நிதியைக் குறைத்துள்ளனர்.
நிதி குறைப்பு:
குறிப்பாக எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மையினருக்கான நிதி ஒதுக்கீடுகளில் கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, பட்டியலினத்தவர் மேம்பாட்டிற்காகக் கடந்த பட்ஜெட்டில் ரூ.2,140 கோடி ஒதுக்கப்பட்ட போதிலும் ரூ.800 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. ஓபிசி திட்டங்களுக்கும் குறைந்த அளவே செலவிட்டுள்ளனர்.
நிதிப் பற்றாக்குறை:
நிதிப் பற்றாக்குறை 4.9 சதவீதமாக இருக்கும் எனக் கடந்த பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்கள். அது 4.8 சதவீதமாக மேம்பட்டு இருக்கிறது. ஆனால், இதில் மகிழ்ச்சியடைய எதுவுமே இல்லை. நாட்டின் பொருளாதாரம் மந்தமாகி வருவதாக இத்தனை காலம் நாங்கள் சொன்னோம். இத்தனை காலம் அதை நம்பாமல் இருந்தார்கள்.. இப்போது எங்களை நம்புவார்கள் என்று நினைக்கிறேன். அரசின் செயல்திறனும் குறைந்துள்ளது..
2025-26 நிதியாண்டிற்கு மூலதனச் செலவு ரூ.1,02,661 கோடி அதிகரித்துள்ளன. ஆனால், முந்தைய ஆண்டுகளில் ஒதுக்கீடு செய்த அளவுக்கு அவர்கள் செலவழிக்கவில்லை. இதனால் அரசின் திறனை நான் சந்தேகிக்கிறேன். முந்தைய பட்ஜெட்களில் பல திட்டங்கள் ஆரவாரமாக அறிவிக்கப்பட்டன. ஆனால், அதற்கான நிதி இந்த முறை குறைக்கப்பட்டுள்ளன. அந்த திட்டங்கள் மீதான நம்பிக்கையை அரசு இழந்துள்ளதையே இது காட்டுகிறது.
ரயில்வே துறைக்கு ஒதுக்கீடு குறைவு:
நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு ரயில்வே துறை தான் சேவை செய்கிறது. ஆனால், ரயில்வே துறைக்கான நிதி பெரியளவில் உயர்த்தப்படவில்லை. கடந்தாண்டு ரூ. 2,12,786 கோடியாக ரயில்வே துறை ஒதுக்கீடு இருந்த சூழலில், இந்தாண்டு முந்தைய பட்ஜெட்டில் இருந்து வெறும் ரூ.766 மட்டுமே கூடுதலாக ஒதுக்கி, ரூ. 2,13,552 கோடி ஒதுக்கியுள்ளனர்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்க ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களில் கூட குறைவான அளவே நிதியை ஒதுக்கியுள்ளனர். தலைமை பொருளாதார ஆலோசகரின் ஆலோசனைகளை நிதியமைச்சரோ, பிரதமரோ பொருட்படுத்தவில்லை என்பதையே இது காட்டுகிறது. தேய்ந்துபோன பாதையில் நிதியமைச்சர் நடந்து கொண்டிருக்கிறார். கடந்த 1991 மற்றும் 2004இல் செய்தது போல் அவர் சுதந்திரமாக இருக்க விரும்பவில்லை. கட்டுப்பாடுகளை நீக்க அவர் தயாராக இல்லை. தொழில்முனைவோர், சிறுகுறு நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடுகளை நீக்க அவர் தயாராக இல்லை..
அதிகார வர்க்கம்:
இந்த பட்ஜெட்டால் அதிகார வர்க்கம் வேண்டுமானாலும் மகிழ்ச்சியடையும்.. ஏழை மக்கள் இல்லை.. 2025-26ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வழக்கமான 6 அல்லது 6.5 சதவீதத்தை விட அதிகமாக இருக்காது என்றே நான் கருதுகிறேன்" என்று அவர் சாடினார்.












Click it and Unblock the Notifications