நாடாளுமன்றத்தில் ஜுலை 5ம் தேதி பட்ஜெட் தாக்கல்.. தமிழகத்தின் நிர்மலா சீதாராமனுக்கு முதல் சவால்
டெல்லி: மோடி தலைமையிலான அரசு நாட்டில் மீண்டும் பதவி ஏற்றுள்ள நிலையில், 17வது மக்களவையின் முதல் பட்ஜெட்டை வரும் ஜுலை 5ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். தேர்தலில் சொல்லப்பட்ட முக்கிய வாக்குதிறுதிகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பு உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக இரண்டாவது முறையாக மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது. மோடியின் அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு நிதித்துறை கொடுக்கப்பட்டுள்ளது.
சென்ற முறை பாதுகாப்பத்துறை அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன் இந்தமுறை நிதித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனால் அவருக்குத்தான் மோடி அரசின் மீதான எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் முதல் சவாலும் காத்திருக்கிறது.
ஏன் தோத்தீங்க.. செம டென்ஷனில் அமித்ஷா.. பதில் சொல்ல முடியாமல் திணறிய ஐவர்!
பியூஸ் கோயல் தாக்கல்
கடந்த முறை நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு உடல்நிலை சரியில்லாமல் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்ததால் அவருக்கு பதில்,பியூஸ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
ரூ.6 ஆயிரம் ஒதுக்கீடு
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 20ம் ம் தேதி உரையாற்ற உள்ளதாகவும், மோடி அரசின் இரண்டாவது 5 ஆண்டுகளுக்கான முதல் பட்ஜெட் வரும் ஜுலை 5ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். பொருளாதார ஆய்வறிக்கை வரும் ஜுலை 4ம் தேதி வெளியிடப்பட உள்ளது. சிறுகுறு விவசாயிகளூக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, 3 கோடி வணிகர்களுக்கு பென்சன் திட்டம் உள்ளிட்டவைகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது..
ரயில்வே பட்ஜெட்
எனவே இந்த திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற வாயப்பு உள்ளது. இதேபோல் பாதுகாப்புத்துறைக்கான நிதி ஒதுக்கீடு, விவசாயம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை முக்கிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ரயில்வே பட்ஜெட்டும் பொதுபட்ஜெட்டோடு சேர்த்து தாக்கல் செய்யப்படும் என்பதால் பல்வேறு ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்தும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
நிர்மலாவுக்கு சவால்
இதேபோல் கோதாவரி- காவிரி இணைப்புக்கு நிதி எந்த அளவுக்கு ஒதுக்கப்படும் என்பது குறித்த எதிர்பார்ப்பும் உள்ளது. ஏனெனில் வடமாநிலங்களில் வென்ற பாஜகவுக்கு தென்மாநிலங்களில் வெல்ல முடியாமல் போனதுக்கு, குறிப்பாக தமிழகத்தில் வெல்ல முடியாமல் போனத்துக்கு காவரி நீர் பிரச்னை முக்கியமாக பார்க்கப்படுகிறது. எனவே தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு ஒவ்வொரு துறைக்குமான நிதி ஒதுக்கீடு மற்றும் வரி வருவாயை அதிகரிப்பது, செலவினங்களை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை நிச்சயம் சவாலாக இருக்கும்.