ஆயில் நிறுவனங்கள்தான் பெட்ரோல் விற்பனை செய்ய வேண்டும் என்ற தடை இனி இல்லை.. மத்திய அரசு அதிரடி முடிவு
டெல்லி: பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனையில் ஈடுபட ஆயில் தவிர்த்த பிற புதிய நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்க மத்திய அமைச்சரை இன்று அதிரடியாக ஒப்புதல் வழங்கி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தற்போது, இந்தியாவில் எரிபொருள் சில்லறை விற்பனை உரிமத்தைப் பெற, ஒரு நிறுவனம் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி, சுத்திகரிப்பு, பைப் லைன் அல்லது திரவ இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி) டெர்மினல்களில் குறைந்தது, 2,000 கோடி முதலீடு செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
இதை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளோம். ரூ.250 கோடி விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் எரிபொருள் சில்லறை விற்பனையில் நுழையலாம். ஆனால் 5% விற்பனை நிலையங்கள் கிராமப்புறங்களில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு இந்த அனுமதியை வழங்குவோம். பெட்ரோல், டீசல், எல்.என்.ஜி மற்றும் சி.என்.ஜி ஆகியவ விற்பனை உரிமை இவற்றில் அடங்கும்.
நாளை வாக்கு எண்ணிக்கை.. நாங்குநேரி, விக்கிரவாண்டி யாருக்கு? மகாராஷ்டிரா, ஹரியானாவில் யார் ஆட்சி?
இந்த மாற்றம் சந்தையில் புதிய வழியை திறந்துவிட்டு, தனியார் முதலீட்டை மேம்படுத்தும். போட்டி அதிகரிப்பதால் சேவை மேம்படும்.
புதிய கொள்கை வணிக வசதி மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும்.
இந்தத் துறையில், நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும். அதிகமான சில்லறை விற்பனை நிலையங்களை நிறுவுவது சந்தை போட்டியை அதிகரிக்கும், இதனால் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை கிடைக்கும்.
அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் (பிபிசிஎல்) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் லிமிடெட் (ஹெச்பிசிஎல்) ஆகியவை தற்போது நாட்டில் 65,000 பெட்ரோல் பம்புகளை வைத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.