14 விளை பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு - மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்
டெல்லி: 14 வேளாண் விளைபொருட்களுக்கான கொள்முதல் விலையை அதிகரிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பொருளாதார உறவுகளுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற்றது.
குறைந்த வட்டியில் கடன்.. அதிக கொள்முதல் விலை நிர்ணயம்.. விவசாயிகளுக்கு மத்திய அரசு செம அறிவிப்பு!
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இதில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, பிரகாஷ் ஜவடேகர், நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 14 வேளாண் பயிர்களுக்குமான குறைந்தபட்ச ஆதார விலைகளை (MSPs) அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
செய்தியாளர்களுடன் சந்திப்பு
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய அமைச்சரவையின் முடிவுகளை விவரித்தார். நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ 53 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் நெல் ரகங்களின் அடிப்படையில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ1868 மற்றும் ரூ1888 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
சோளம், கேழ்வரகு
சோளத்துக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ 70 உயர்த்தப்பட்டு ரகங்களின் அடிப்படையில் ஒரு குவிண்டால் விலை ரூ 2620, ரூ2640 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கம்புக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ150 உயர்த்தப்பட்டுள்ளதால் ஒரு குவிண்டால் விலை ரூ 2,150; கேழ்வரகின் குறைந்தபட்ச ஆதார விலை ரூ145 உயர்த்தப்பட்டு ஒரு குவிண்டால் விலை ரூ3, 295 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மக்கா சோளம், எள்
மக்கா சோளத்துக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ90; துவரைக்கான ஆதார விலை ரூ300; எள்ளுக்கான ஆதார விலை ரூ370; பே எள் எனப்படும் நைஜர் விதை ரகத்துக்கான ஆதார விலை ரூ755 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் மொத்தம் 14 வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.